மும்பை : பிசிசிஐ இன்று வெளியிட்ட அறிவிப்பில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அவருக்கு 35 வயது ஆகிறது.
இன்னும் மூன்று மாதங்களில் பெண்கள் டி20 உலகக்கோப்பை நடக்க உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும், ஒருநாள் போட்டிகளில் கோஸ்வாமி பங்கேற்பார் என தெரிகிறது.

பெண்கள் கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவது மிகவும் அரிது என்பதால், கோஸ்வாமி ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஆட முடிவெடுத்துள்ளார் என ஊகிக்க முடிகிறது.
கோஸ்வாமி உலகின் சிறந்த பெண் வேகப்பந்துவீச்சாளராக கருதப்படுகிறார். ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய சாதனையும் இவர் வசமே உள்ளது. பெண்கள் ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்களுக்கு அதிகமாக எடுத்த ஒரே வீராங்கனை இவர் மட்டுமே.
ஜுலன் கோஸ்வாமி 68 டி20 போட்டிகளில் 56 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். மேலும், 169 ஒருநாள் போட்டிகளில் 203 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்.
கடந்த ஏப்ரல் மாதம், ஜுலன் கோஸ்வாமியின் கிரிக்கெட் சாதனைகளை கௌரவப்படுத்தும் வகையில், அஞ்சல் துறையில் அவரது தபால் தலை வெளியிடப்பட்டது.