பெங்களூர்: இருபது ஓவர் உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியினர் 72 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்தியாவில் பெண்களுக்கான 5 வது ஐ.சி.சி. உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், அயர்லாந்து, மேற்கு இந்திய தீவுகள் உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன.

பெங்களூரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்துடன் மோதியது. டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஜகனாரா ஆலம் பவுலிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய மிதாலி ராஜும் வனிதாவும் வேகமாக ஆடினார்கள். 7.4 ஓவர்களில் 62 ரன்கள் எடுத்த நிலையில், வனிதா 38 ரன்களில் ஆட்டமிழந்தார். மந்தனா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
35 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த மிதாலி ராஜ், ருமானா அஹமத்தின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நான்காவதாகக் களமிறங்கிய ஹர்மான்பிரீத் கெளர், அதிரடியாக ஆடினார். 15-வது ஓவரில் இந்த உலகக்கோப்பையின் முதல் சிக்ஸரை அடித்தார். அடுத்த ஓவரில் மற்றொரு சிக்ஸரையும் அடித்தார்.
பிறகு, 29 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். இவரைப் போல வேதா கிருஷ்ணமூர்த்தியும் அதிரடியாக ஆடினார். அவர் 24 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில், இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்தது. சர்வதேச மகளிர் டி20 போட்டியில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
இந்திய அணியின் ஆட்டத்தை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடியது. ஆனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 91 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது.
அந்த அணியின் நிகர் சுல்தானா அதிகபட்சமாக 27 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்கமால் இருந்தார். இந்திய அணியின் பூணம் யாதவ், பாடீல் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதிரடியாக 29 பந்துகளில் 40 ரன்கள் குவித்த இந்திய அணியின் ஹர்மான்பிரீத் கெளர் சிறந்த ஆட்டகாரராக தேர்வு செய்யப்பட்டார்.