காட்டுநாயகே : இந்திய மகளிர் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று தொடங்கியது. நேற்றைய தினம் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்தது. விக்கெட் கீப்பர் தனியா பட்டியா சிறப்பாக விளையாடி 46 ரன்களை குவித்தார்.
அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி 19.3 ஓவர்களில் 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது.
பூனம் யாதவ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.
இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய மகளிர் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.