மகளிர் டி-20... இந்தியா கெத்து... பாகிஸ்தானை தெறிக்க விட்டது... 7வது முறையாக பைனல் நுழைந்தது!
கோலாலம்பூர்: மலேசியாவில் நடந்துவரும் மகளிர் டி-20 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வென்று இந்தியா பைனல் நுழைந்தது. ஏழாவது முறையாகவும் கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
7வது மகளிர் டி-20 ஆசியக் கோப்பை போட்டிகள் மலேசியாவில் நடக்கின்றன. இதுவரை நடந்த 6 ஆசியக் கோப்பை போட்டியிலும் இந்தியாவே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
தற்போது நடக்கும் 7வது ஆசியக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகியவை தலா 4 ஆட்டங்களில் மூன்றில் வென்று 6 புள்ளிகளுடன் இருந்தன.
நேற்று நடந்த இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனல் நுழையும் நிலை இருந்தது.

பாகிஸ்தான் சுருண்டது
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் சானா மிர் 20, நஹிதா கான் 18 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இந்திய அணியில் ஏக்தா பிஸ்த் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இந்தியா கெத்து
மிகவும் சுலபமான இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஆனால், அனுபவசாலியான மிதாலி ராஜ், தீப்தி சர்மா ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். 2.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 5 ரன்கள் என்ற நிலையில் தடுமாறியது. அடுத்து களமிறங்கிய ஸ்மிருதி மந்தானா 38, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 34 ரன்கள் எடுத்தனர். 16.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

7வது முறை கோப்பை
ஏற்கனவே நடந்த 6 ஆசியக் கோப்பைகளிலும் இந்தியா கோப்பையை வென்றது. தற்போது 7வது முறையாக இந்தியா பைனல் நுழைந்துள்ளது. கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

வங்கதேசத்துடன் மோதல்
மற்றொரு லீக் ஆட்டத்தில் மலேசியாவை வென்று, வங்கதேசம் பைனலுக்கு நுழைந்துள்ளது. இன்று நடக்கும் பைனலில் இந்தியாவும், வங்கதேசமும் மோத உள்ளன.


Click it and Unblock the Notifications