லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் 2028: வரலாற்று சாதனை படைத்து தகுதி பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
துபாய்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில், தனது பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததன் மூலம், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெற்றுள்ளது.
இந்தத் தொடரில் ஆசிய கண்டத்திலிருந்து தகுதிபெறத் தகுதியான அணிகளில், இந்திய அணி மிக உயர்ந்த இடத்தைப் பிடித்ததை அடுத்து இந்தத் தகுதி உறுதி செய்யப்பட்டுள்ளது. குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

ஒவ்வொரு கண்டத்திற்கும் ஒரு அணி மட்டுமே தகுதி பெற முடியும் என்ற அடிப்படையில் ஓசியானியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் இருந்து முறையே ஆஸ்திரேலியா, கிரேட் பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன.
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கிரிக்கெட் தகுதி முறை
லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு மீண்டும் சேர்க்கப்பட்டு உள்ளது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான டி20 போட்டிகளில் தலா ஆறு நாடுகள் போட்டியிடவுள்ளன. ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஓசியானியா ஆகிய கண்டங்களின் நாடுகள் இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து தகுதி இடங்கள், தற்போதைய ஐசிசி போட்டிகள் மற்றும் ஐசிசி டி20 தரவரிசைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். ஆறாவது மற்றும் இறுதி இடம் 2027 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் புதிய ஐசிசி ஒலிம்பிக் தகுதிச் சுற்று (ICC Olympics Qualifier) மூலமாகத் தீர்மானிக்கப்படும்.
அமெரிக்க கண்டத்தைப் பொறுத்தவரை, போட்டியை நடத்தும் நாடான அமெரிக்கா (USA) ஜூன் 30, 2026 முதல் டிசம்பர் 31, 2026 வரையிலான தகுதிச் சுற்று காலத்தில் ஐசிசி டி20 தரவரிசையில் முதல் 15 இடங்களுக்குள் இருந்தால் மட்டுமே நேரடியாகத் தகுதி பெற முடியும்.
ஒருவேளை அமெரிக்க மகளிர் அணி இந்த நிபந்தனையைப் பூர்த்தி செய்யத் தவறினால், மார்ச் 1, 2027 தேதியன்றைய ஐசிசி டி20 தரவரிசையின்படி எந்தவொரு கண்டத்திலிருந்தும் தகுதி பெறாத, மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் நாட்டிற்கு அந்தத் தகுதி வாய்ப்பு வழங்கப்படும். அதேபோல் அமெரிக்க ஆடவர் அணி இந்தத் தகுதியைப் பெறத் தவறினால், டிசம்பர் 31, 2026 வரை தகுதி பெறாத, அடுத்த மிக உயர்ந்த தரவரிசையில் உள்ள நாட்டிற்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும்.
"ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் இடம் பெறுவது நமது விளையாட்டின் ஒரு முக்கிய மைல்கல். மேலும், கிரிக்கெட்டின் மிகச்சிறந்த திறமைகளை உலகிற்கு வெளிப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகவும் இது அமையும். இந்தத் தகுதிப் பாதை லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டிகளை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும்" என்று ஐசிசி தலைவர் ஜெய் ஷா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications

