
சவால் இலக்கு
பாகிஸ்தான் அணியின் ஓப்பனிங் வீராங்கனைகள் முனீபா அலி 12 ரன்களுக்கும், ஜவேரியா கான் 8 ரன்களுக்கும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதன் பின்னர் வந்த நிதார் தார் (0), அமீன் (11) அவுட்டாக 68 ரன்களுக்குள் அந்த அணி 4 விக்கெட்களை இழந்தது. எனினும் அந்த அணியை கேப்டன் மரூஃப் மற்றும் ஆயிஷா நசீம் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். மரூஃப் (68) - ஆயிஷா (43) ரன்களும் கடைசி நேரத்தில் அடிக்க 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 149 ரன்களை குவித்தது.

இந்திய அணி இன்னிங்ஸ்
சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி எந்தவித பதற்றமும் இன்றி நிதானமாக தொடங்கினர். ஓப்பனிங் வீராங்கனைகள் யாஷ்டிகா பாட்டியா 17 ரன்களும், சஃபாலி வெர்மா 33 ரன்களும் சேர்த்தனர். இதன் பின்னர் வந்த கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் 16 ரன்களை அடிக்க, இந்திய அணியின் ரன் ரேட் சற்று கவலைக்கிடமாக சென்றது. இதனால் கடைசி 4 ஓவர்களில் இந்தியா 40 ரன்களை அடிக்க வேண்டிய சூழல் உருவானது.
அப்போது கியரை மாற்றிய ஜெமிமா மற்றும் ரிச்சா கோஷ் ஜோடி பாகிஸ்தான் பந்துவீச்சை பறக்கவிட்டனர். குறிப்பாக 18வது ஓவரில் ரிச்சா கோஷ் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை பறக்கவிட்டார். அந்த ஓவரில் மட்டும் 14 ரன்கள் சேர்ந்தன. இதனால் கடைசி 2 ஓவர்களில் வெறும் 14 ரன்கள் மட்டுமே தேவை என்ற சூழலுக்கு இந்தியா சென்றது.

கடைசி வரை பரபரப்பு
18 வது ஓவரில் ரிச்சா கோஷ் அதிரடி காட்டிய சூழலில் 19வது ஓவரில் ஜெமிமா பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் வந்துவிட்டன. இதனால் கடைசி ஓவர் வரை பரபரப்பாக செல்லும் என எதிர்பார்த்த ஆட்டம் 19வது ஓவரின் இறுதியிலேயே முடிந்துவிட்டது. இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

சிறப்பான ஆட்டம்
இந்திய அணி தரப்பில் சிறப்பாக விளையாடிய ஜெமிமா 38 பந்துகளில் 53 ரன்களை விளாசினார். மற்றொரு புறம் ரிச்சா கோஷ் 20 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்களை விளாசினார். பந்துவீச்சை பொறுத்தவரையில் ராதா யாதவ் 2 விக்கெட்களும், தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.


Click it and Unblock the Notifications