மகளிர் டி20 உலகக்கோப்பை: கடைசி வரை போராடிய ஹர்மன்ப்ரீத் கவுர்.. அரையிறுதியில் இந்திய அணி தோல்வி!
கேப்டவுன்: மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 5 ரன்கள் வித்தியாசத் தில் தோல்வியடைந்து இந்திய அணி அதிர்ச்சி கொடுத்துள்ளது.
மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி இன்று அரையிறுதி சுற்றில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு டாஸில் இருந்ததை போலவே பேட்டிங்கிலும் அதிர்ஷ்டம் அதிகமாகவே இருந்தது எனக்கூறலாம்.

ஆஸ்திரேலிய இன்னிங்ஸ்
தொடக்க பேட்டர்கள் அலீசா ஹீலி மற்றும் மூனி ஆகியோர் சிறப்பான அடிதளத்தை அமைத்துக்கொடுத்தனர். சிறப்பாக விளையாடிய மூனி 37 பந்துகளில் 54 ரன்களை குவித்தார். மற்றொரு ஓப்பனரான ஹீலி 25 ரன்களை விளாசினார். இதனால் 88 ரன்களுக்கு 2 விக்கெட்கள் என வலுவான நிலையில் ஆஸ்திரேலியா சென்றது. 2 விக்கெட்களுக்கு பிறகாவது திருப்புமுணை ஏற்படும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது.

சவால் இலக்கு
மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த கேப்டன் லான்னிங் மற்றும் கார்ட்னர் ஆகியோர் இந்தியாவின் பவுலிங்கை அடித்து நொறுக்கினர். அதிரடியாக ஆடிய லன்னிங் 34 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 49 ரன்களை விளாசினார். மற்றொருபுறம் கார்ட்னர் 18 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்களை குவித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்களை குவித்தது.

இந்தியா சொதப்பல்
சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்கமே அதிர்ச்சி தான் காத்திருந்தது. ஓப்பனிங் பேட்டர்கள் சஃபாலி வெர்மா 9 ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்த்த ஸ்மிருதி மந்தனா 2 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய யாஷ்டிகா பாட்டியா வெறும் 4 ரன்களை மட்டுமே எடுத்தார்.

கேப்டனின் போராட்டம்
இதனால் 28 ரன்களுக்கெல்லாம் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. மிடில் ஆர்டரில் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஜெமீமா ஆகியோர் சிறப்பான பார்டனர்ஷிப்பால் அணியை மீட்டனர். இருவரும் 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து எப்படியாவது வெற்றியை தேடி கொடுப்பார்கள் என்று நினைத்த போது திருப்புமுணை ஏற்பட்டது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் 52 ரன்களுக்கும், ஜெமிமா 43 ரன்களுக்கும் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

கடைசி ஓவர் போராட்டம்
இதன் பின்னர் வந்த பேட்டர்கள் கடைசி வரை நீடித்து நிலைக்காததால் கடைசி ஓவரில் 16 ரன்களை அடிக்க வேண்டிய சூழல் உருவானது. ஆனால் இந்திய அணியால் 10 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்ததால் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 167 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


Click it and Unblock the Notifications