மும்பை: இந்திய யு-19 அணியின் கேப்டனாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுத்தவர் பிரித்வி ஷா. ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் பட்டை தீட்டப்பட்ட பிரித்வி ஷாவின் சிறப்பான பேட்டிங் காரணமாக 18 வயதிலேயே இந்திய அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டார்.
இந்தியாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே சதம் விளாசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த பிரித்வி ஷா, சச்சின், சேவாக் மற்றும் லாராவின் கலவை என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியால் போற்றப்பட்டார். இந்திய அணியின் அடுத்த கேப்டன் என்றெல்லாம் பேசப்பட்ட பிரித்வி ஷாவின் கிரிக்கெட் வாழ்க்கை 2020ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது.

ஆஸி. அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட பிரித்வி ஷா, மீண்டும் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படவில்லை. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதும், ஐபிஎல் தொடரில் சோபிக்க தவறி வருகிறார். அதேபோல் இந்திய டாப் ஆர்டரில் விளையாட அதிக போட்டிகள் இருப்பதால், பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. இதனிடையே பிரித்வி ஷாவை சுற்றி ஒழுங்கீன சர்ச்சைகளும் சூழ்ந்தன.
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு முறை இந்திய அணியில் தேர்வு செய்யப்படும் போதும் இன்ஸ்டாகிராமில் சாய் பாபாவின் புகைப்படத்தை பதிவிட்டு சக்தி கொடு என்று வேண்ட தொடங்கினார். இதன் காரணமாகவே சமூக வலைதளங்களில் ட்ரால்களுக்கும் ஆளானார். இந்த நிலையில் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட பிரித்வி ஷா, முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அது என்னவென்றால், துலீப் டிராபி கிரிக்கெட் தொடர் முடிவடைந்த பின், இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் ஆட முடிவு எடுத்துள்ளார்.
இங்கிலாந்தின் நார்த்தன்டன்ஷயர் கிளப் அணிக்காக பிரித்வி ஷா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அண்மையில் இந்திய அணியின் டி20 பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் கென்ட் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். இதனால் அர்ஷ்தீப் சிங்கின் பெயர் டெஸ்ட் அணியிலும் பரிசீலனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. ஒருவேளை பிரித்வி ஷா இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்திய இரண்டாம் கட்ட அணியில் வாய்ப்பு கொடுக்க வாய்ப்புகள் உருவாகலாம்.