உலகக் கோப்பை கிரிக்கெட் வெற்றி-உலகெங்கும் இந்தியர்கள் கொண்டாட்டம்
வாஷிங்டன்: கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்தியா வென்றுள்ளதை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்,.

இலங்கை அணியை நசுக்கி அபார வெற்றி பெற்று, 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2வது உலகக் கோப்பையை இந்தியா வென்ற விதம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பெரும் குஷியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியா முழுவதும் நேற்று இரவு முழுவதும் ரசிகர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதேபோல பல்வேறு நாடுகளிலும் இந்தியர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடியுள்ளனர். கனடாவின் டோரன்டோ நகரின் பிராம்ப்டன் பகுதியில்-இந்தப் பகுதியில் இந்தியர்கள் அதிகம் வசிப்பதால் லிட்டில் இந்தியா என்ற பெயர் உண்டு- நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கூடி கொண்டாடினர்.
தேசியக் கொடிகளை கையில் ஏந்தியபடி உற்சாகமாக இந்திய வெற்றியை இந்திய சமூகத்தினர் கொண்டாடினர். கனடா நாடாளுமன்ற உறுப்பினர் குர்பக்ஸ் சிங் மல்ஹி, ரூபி தல்லா உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.
பல்வேறு பார்களில் கிரிக்கெட் போட்டி நேரடியாகவும் பெரிய திரைகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கூடி பார்த்து ரசித்தனர்.
இதேபோல அமெரிக்காவிலும் இந்தியர்கள், டோணி தலைமையிலான அணியின் வெற்றியை சிறப்பாக கொண்டாடினர்.
துபாயில் பட்டாசு வெடித்து உற்சாகம்
அதேபோல துபாயில் பட்டாசுகளை வெடித்து இந்தியர்கள் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடினர்.
ஐக்கிய அரபு எமிரேட் முழுவதுமே இந்தியர்களின் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. சிறிய ஐஸ்கிரீம் பார்லர்களிலிருந்து பெரிய மால்கள் வரை எங்கு பார்த்தாலும், இந்தியர்களின் தலைகளாகவே இருந்தது.
டோணி அடித்த சூப்பர் சிக்ஸைப் பார்த்து அத்தனை இந்தியர்களும் இந்தியா என்று குரலிட்டபோது அந்தப் பகுதியே நடுங்கியது போல இருந்தது.
துபாயில், இந்தியா வெற்றியைத் தொட்ட அந்த இரவில் பட்டாசுகளை வெடித்து இந்தியர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தி்ல ஈடுபட்டனர். இதனால் போலீஸார் பரபரப்பாகினர். இருப்பினும் உற்சாகக் கொண்டாட்டத்தை அறிந்த அவர்கள் தடுக்கவில்லை.
மேலும் கார்களில் மூவண்ணக் கொடியை கையில் பிடித்தபடி இந்தியர்கள் நகரை வலம் வந்தது வித்தியாசமாக இருந்தது. மீனா பஜார் பகுதியில், பெரும் திரளான இந்தியர்கள் கூடி இறுதிப் போட்டியை எல்சிடி டிவியில் பார்த்து ரசித்து குஷியுடன் அதைக் கொண்டாடினர்.
இந்தியர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் குறித்து ஒன்றுமே தெரியாத அரபு நாட்டவர்களும் கூட இந்த உற்சாகத்தில் கலந்து கொண்டது ஆச்சரியமாக இருந்தது.
உலக நாடுகள் பலவற்றிலும் கூட இந்த இறுதிப் போட்டி பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்ததாக பிபிசி செய்தி தெரிவித்தது. குறிப்பாக டெண்டுல்கர் சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது.
மொத்தத்தில் இந்தியா பெற்ற இந்த அபார வெற்றியை, இந்தியர்கள் மட்டுமல்லாமல், இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளும் சேர்ந்து கொண்டாடியது உண்மையிலேயே ஆச்சரியமானதுதான்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications