இந்தியர்களுக்கு பெருந்தன்மையான மனசு கிடையாது-சொல்கிறார் அப்ரிதி
இஸ்லாமாபாத்: இந்தியா சிறப்பாக விளையாடியது, எனவே வென்றது என்று மொஹாலியில், இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்த பின்னர் பேசிய பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிதி இப்போது இந்தியாவைப் பற்றி தாறுமாறாக விமர்சித்துள்ளார்.

இந்தியாவுடன் நடந்த அரை இறுதிப் போட்டியில் இந்திய அணியைய பாராட்டிப் பேசியிருந்தார் அப்ரிதி. இது இந்திய ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டது. அப்ரிதியை ஜென்டில்மேன் என்று அனைவருமே பாராட்டினார்கள்.
ஆனால் தற்போது இந்தியர்கள் மீது பாய்ந்துள்ளார் அப்ரிதி. குறிப்பாக இந்திய மீடியாக்களை சரமாரியாக விமர்சித்துள்ளார். மேலும் இதில் மதத்தையும் அவர் இழுத்துள்ளார். தனது அணியின் தோல்வி குறித்து பாகிஸ்தான் மீடியாக்களிடமிருந்து தப்பவும், பாகிஸ்தான் மக்களின் அதிருப்தியிலிருந்து வெளியே வரவும் இதுபோல அவர் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இந்தியர்களையும், இந்திய மீடியாக்களையும், இந்தியாவையும் குறைத்துப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், பாகிஸ்தானியர்களுக்கு இருப்பதைப் போன்ற பெரிய மனது இந்தியர்களுக்குக் கிடையாது. என்னைப் பொறுத்தவரை, பாகிஸ்தானியர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் உள்ளதைப் போன்ற அகண்ட மனது, இந்தியர்களுக்குக் கிடையாது என்றுதான் சொல்வேன். கணிவான இதயம் இந்தியர்களுக்குக் கிடையாது. அல்லா எங்களுக்குக் கொடுத்துள்ளதைப் போன்ற சுத்தமான, கணிவான இதயம் நிச்சயம் இந்தியர்களுக்கு இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
அவர்களுடன் சேர்ந்து வாழ்வது என்பது நமக்கு மிக மிக கஷ்டமானது. அவர்களுடன் நீண்ட கால உறவையும் நம்மால் நிச்சயம் பேண முடியாது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதால் ஒரு பயனும் ஏற்படாது என்பது எனது கருத்து. கடந்த 60 ஆண்டுகளில் நட்பை வளர்ப்பதற்காகவும், உறவுகளை வலுப்படுத்துதவற்காகவும் எத்தனை முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஏதாவது பயன் இருந்ததா. இருக்காது. அவர்களுக்கு்ததான் நல்ல உள்ளம் இல்லையே.
சண்டை போட்டுக் கொள்வதில் இந்த இரு நாடுகளுக்கும் விருப்பம் இல்லை. ஆனால் மூன்றாவது நாடு ஒன்றுதான் இந்த இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஏற்பட விடாமல் தடுத்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த நாடு இரு நாடுகளையும் இணைய விடாது, நட்பாக இருக்க விடாது.
இந்திய மீடியாக்கள் மிகவும் பொறாமை பிடித்தவை, பாரபட்சத்துடன் கூடியவை. இவர்களுடன் ஒப்பிடிட்டால் பாகிஸ்தான் மீடியாக்கள் நூறு மடங்கு சிறந்தவை என்பது எனது கருத்து. இவர்களால்தான் இரு நாடுகளின் உறவுகளும் கூட சீர்கெட்டுப் போயுள்ளது. இந்திய மக்கள் இப்படி இருக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் மீடியாக்கள்தான் அனைத்தையும் கெடுக்கின்றன.
அதேபோல பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், பாகிஸ்தான் அணியினர் சூதாட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று கூறியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதேசமயம், பாகிஸ்தானை வென்று அந்த வெற்றியை, மும்பையில் பலியானவர்களுக்கு காணிக்கை ஆக்குவேன் என்று கெளதம் கம்பீர் கூறியதையும் நான் காட்டமாக கண்டிக்கிறேன். இதெல்லாம் அரசியல் பேச்சு. கம்பீர் இப்படிப் பேசியிருக்கக் கூடாது. அவரிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. மும்பையில் நடந்த தாக்குதலுக்கு நானோ, அல்லது பாகிஸ்தான் வீர்ர்களா காரணம் என்று கேட்டார் அப்ரிதி.
பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதியின் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட்:சிறப்பு பக்கம்
உலக கோப்பை கிரிக்கெட்:படங்கள்
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications