லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் பேட்டிங்கில் மூன்று வீரர்கள் சதம் அடித்திருந்தாலும், ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையும் ஒரு வகையில் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ராகுல், கில், பண்ட் என நான்கு பேட்ஸ்மேன்கள் மட்டுமே சேர்ந்து 424 ரன்களைக் குவித்தனர். மேலும், உதிரிகள் மூலமாக 31 ரன்கள் கிடைத்தது. ஆனால், மீதமுள்ள ஏழு பேட்ஸ்மேன்கள் சேர்ந்து மொத்தமாக 16 ரன்களை மட்டுமே எடுத்தனர். இது இந்திய அணியின் பேட்டிங் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இந்த போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (101), சுப்மன் கில் (147) மற்றும் ரிஷப் பண்ட் (134) சதம் விளாசினர். கே.எல். ராகுல் 42 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் முக்கியத் தூண்களாகக் கருதப்படும் இவர்கள் நால்வரும், தங்களது பொறுப்பை உணர்ந்து சிறப்பாக ஆடி ரன்களைச் சேர்த்தனர்.

ஆனால், மற்றவர்கள் அனைவரும் சொதப்பினர். நீண்ட காலத்திற்குப் பிறகு அணியில் இடம்பிடித்த கருண் நாயர், நான்கு பந்துகளைச் சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சாய் சுதர்சனும், நான்கு பந்துகளைச் சந்தித்து டக் அவுட் ஆனார்.
அணியின் ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா 11 ரன்களும், ஷர்துல் தாக்கூர் ஒரு ரன்னும் மட்டுமே எடுத்தனர். பின்வரிசை வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா டக் அவுட் ஆக, முகமது சிராஜ் 3 ரன்களும், பிரசித் கிருஷ்ணா ஒரு ரன்னும் எடுத்தனர்.
அதிக ரன் குவித்த நான்கு பேட்ஸ்மேன்களைத் தவிர்த்து, மற்ற வீரர்கள் குறைந்தபட்சம் 20 அல்லது 30 ரன்கள் எடுத்திருந்தால் கூட, அது இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு ஒரு சமநிலையை அளித்திருக்கும். ஆனால், முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்த போட்டியில் 471 ரன்களை வைத்து இந்திய அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஆனால், இந்த நீண்ட டெஸ்ட் தொடரில், இது போன்ற ஒருபக்கச் சார்பான பேட்டிங் வரிசையை வைத்துக்கொண்டு இந்திய அணியால் சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை, இந்த போட்டியில் ரன் குவித்த நான்கு பேட்ஸ்மேன்களும் அடுத்த போட்டியில் சொதப்பினால், இந்திய அணியின் பேட்டிங் வரிசை அதை ஈடுகட்டுமா என்பதே தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்திருக்கும் முக்கிய சந்தேகமாகும்.