மும்பை: ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கப் போவது யார் என்ற கேள்விக்கு தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் பதில் அளித்துள்ளார். சுப்மன் கில், சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய மூவரும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், யார் களமிறங்குவார்கள் என்ற விவாதமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 28 வரை நடக்கவுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள இந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அறிவித்திருக்கிறது.

அதன்படி இந்திய அணிக்கு 3 தொடக்க வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுப்மன் கில், அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய மூவரும் தேர்வாகி இருக்கின்றனர். இதில் சுப்மன் கில் துணைக் கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடைசியாக ஆடிய இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் கொஞ்சம் தடுமாற்றத்தை சந்தித்தார்.
அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் எப்போதும் இடது - வலது காம்பினேஷனில் பேட்டிங் வரிசையை அமைக்கக் கூடியவர். இதனால் அபிஷேக் சர்மாவின் இடத்திற்கு எந்த சிக்கலும் இல்லை. தற்போது சுப்மன் கில் - சஞ்சு சாம்சன் இடையில் மட்டுமே போட்டி ஏற்பட்டுள்ளது. ஆனால் சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால் துணைக் கேப்டனை பெஞ்சில் உட்கார வைக்கும் அளவிற்கு சூர்யகுமார் யாதவ் மற்றும் கம்பீர் கூட்டணிக்கு வலிமை இருக்கிறதா என்பது சந்தேகம் தான். கடைசியாக விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் துணைக் கேப்டனான ரஹானேவை பெஞ்சில் அமர வைத்தார். அதன்பின் துணைக் கேப்டனுக்கான மரியாதையை பிசிசிஐ வழங்கி வந்துள்ளது.
இந்த நிலையில் தொடக்க வீரர்களாக யார் விளையாட வாய்ப்பு என்ற கேள்விக்கு அஜித் அகர்கர் பதில் அளித்துள்ளார். அதில், தொடக்க வீரர்கள் யாரென்பதை கேப்டன் முடிவு செய்வார். இந்திய அணி துபாய் சென்ற பின் அந்த முடிவு எடுக்கப்படும். இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடிய போது, சுப்மன் கில் மிகச்சிறந்த ஃபார்மில் இருந்திருக்கிறார்.
சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடி இருக்கிறார். இதனால் இந்திய அணி மிகச்சிறந்த 2 வாய்ப்புகள் உள்ளன. எதிரணி மற்றும் பிட்ச்-க்கு ஏற்றவாறு கடைசி நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமர வைக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக ரசிகர்களிடையே விவாதங்கள் எழுந்துள்ளன.