“நான் கிளம்புறேன்”.. இந்திய அணியை விட்டு வெளியேறும் உதவி கோச்.. சொன்ன வாக்கை காப்பாற்றாத பிசிசிஐ
பர்மிங்காம்: இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளர் பதவியில் இருந்து ரியான் டென் டோஸ்கேட் விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெதர்லாந்து அணியின் முன்னாள் கேப்டனான இவர், கடந்த 2024 ஆம் ஆண்டு கௌதம் கம்பீரின் பரிந்துரையின் பேரில் இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் மட்டுமே கடந்துள்ள நிலையில், தனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள் திருப்தி அளிக்காததால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜூலை 19 அன்று நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியே அவரது கடைசிப் போட்டியாக இருக்கும் எனத் தெரிகிறது. அவர் உதவி பயிற்சியாளர் பதவியை ஏற்ற போது விரைவில் அவர் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என கூறப்பட்டதாகவும், ஆனால் கடைசி வரை அந்தப் பதவி அவருக்கு வழங்கப்படாததே அவர் வெளியேறுவதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

தற்போது ஃபீல்டிங் பயிற்சியாளராக இருக்கும் டி திலீப் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தம் முடியும் போது நீக்கப்பட்டு, அந்தப் பொறுப்பு டோஸ்கேட்டிடம் வழங்கப்படும் என பிசிசிஐ தரப்பில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்திய அணியின் மூத்த வீரர் ஒருவரின் பரிந்துரையால் திலீப்புக்கு மேலும் ஒரு ஆண்டு காலம் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. இதனால், முறையான பொறுப்பு எதுவும் இல்லாமல் உதவி பயிற்சியாளராக டோஸ்கேட் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய பின் லண்டனில் உள்ள தனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட விரும்புவதும் அவரது இந்த முடிவுக்கு மற்றொரு முக்கியக் காரணமாகும். அவருக்கு 3 சிறு வயது மகன்கள் உள்ளனர்.
அடுத்து அவர் ஐபிஎல் போன்ற உள்நாட்டு டி20 தொடர்களில் பயிற்சியாளராக செயல்பட ஆர்வம் காட்டி வருகிறார் எனவும், ஏற்கனவே ஒரு ஐபிஎல் அணியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் இந்திய அணி சந்தித்த 0-6 என்ற படுதோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து இந்திய அணியின் ஃபீல்டிங் தரம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், டோஸ்கேட் வெளியேற விரும்புவது தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருவரும் இணைந்து பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்கள் என்பதால் கம்பீர் இவரை அதிகம் நம்பியிருந்தார். டோஸ்கேட்டை தொடர்ந்து அணியில் நீடிக்க வைக்க கம்பீர் சில முயற்சிகள் எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications

