லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சற்று வலுவான நிலையில் இருக்கிறது. ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 350 ரன்களை எட்டுவதற்குள் பத்து விக்கெட்டுகளை வீழ்த்தினால், இந்திய அணி வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருக்கிறது. இது சாதகமான ஒரு விஷயமாக இருந்தாலும், இந்திய அணியின் பேட்டிங் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியில் நான்கு வீரர்கள் மட்டுமே ரன் சேர்த்தனர். மற்ற ஏழு பேர் சேர்ந்து மொத்தமே 16 ரன்களைத்தான் எடுத்தார்கள். அதே போல இரண்டாவது இன்னிங்ஸில் இன்னும் மோசமாக மூன்று வீரர்கள் மட்டுமே 30 ரன்கள் சேர்த்திருக்கிறார்கள். இரண்டு வீரர்கள் 20க்கும் 30க்கும் இடையில் ரன்கள் சேர்த்திருக்கிறார்கள். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து உள்ளனர்.
முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் சதம் அடித்திருந்தனர். கே.எல். ராகுல் 42 ரன்கள் சேர்த்திருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சேர்ந்து 16 ரன்கள் எடுத்திருந்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் சதம் அடித்திருந்தனர். சாய் சுதர்சன் 30 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 25 ரன்களும், கருண் நாயர் 20 ரன்களும் மட்டுமே எடுத்திருந்தனர். அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து இருந்தனர்.
அதிலும் எட்டாம் வரிசை முதல் 11ஆம் வரிசை வரையிலான நான்கு பேட்ஸ்மேன்கள் மொத்தம் 4 ரன்கள் தான் எடுத்தனர். பின்வரிசை வீரர்கள் சேர்ந்து 20-30 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு எப்போதுமே இருக்கும். அதிலும் இந்த முறை இந்திய அணியில் 8 பேட்ஸ்மேன்கள் வரை உள்ளனர்.
அதாவது, ஆறு பேட்ஸ்மேன்கள் தவிர்த்து ரவீந்திர ஜடேஜா ஏழாவது மற்றும் ஷர்துல் தாக்கூர் எட்டாவது வரிசையில் உள்ளனர். ஷர்துல் அதிரடியாக 20 அல்லது 30 ரன்கள் அடிப்பார் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் ஒற்றை இலக்கத்தில் ரன் சேர்த்து ஆட்டமிழந்து இருக்கிறார். இதுதான் ஏமாற்றமாக உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் கூட, பேட்டிங்கில் இருக்கும் இந்த பலவீனம் அடுத்த நான்கு டெஸ்ட்களிலும் இந்திய அணியைப் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து இந்திய அணி முதல் டெஸ்ட் முடிந்தவுடன் நிச்சயமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.