மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள இந்திய அணி, ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பையை வெல்லும் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள, மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறும் நான்காவது டெஸ்டில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. லார்ட்ஸில் நடந்த பரபரப்பான மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றதால், இந்த போட்டி இந்திய அணிக்கு வாழ்வா சாவா ஆட்டமாக மாறியுள்ளது. இந்த நிலையில் தான் மழை இந்திய அணிக்கு பெரும் சிக்கலாக மாறி உள்ளது.
மழைக்கு முன்னதாக இந்த தொடர் முழுவதும் இந்திய அணிக்கு காயங்கள் பெரும் தலைவலியாக அமைந்துள்ளன. அணியின் வேகப்பந்து வீச்சுக்கு முதுகெலும்பாக விளங்கும் ஜஸ்பிரித் பும்ராவின் பணிச்சுமை கவலையளிக்கிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்டுகளில் முக்கிய பங்காற்றிய ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி, தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார்.
மேலும், மூன்றாவது டெஸ்டின் போது ஏற்பட்ட காயம் காரணமாக விக்கெட் கீப்பிங்கில் முழுமையாக ஈடுபட முடியாத ரிஷப் பண்ட்டின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பும் காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்திய அணி மான்செஸ்டர் வந்தடைந்தது முதல், அங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே விட்டு விட்டு மழை பெய்து வருவதால், போட்டியின் ஐந்து நாட்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
போட்டியின் முதல் நாளான புதன்கிழமை, 65% மழை பெய்ய வாய்ப்புள்ளது. அன்று வெப்பநிலை 19 முதல் 14 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு போட்டி தொடங்கும் நிலையில், மழையால் ஆட்டம் தாமதமாகத் தொடங்க வாய்ப்புள்ளது.
இரண்டாவது நாள், மழைக்கான வாய்ப்பு 85% ஆக அதிகரிக்கிறது. வெப்பநிலை 21 முதல் 12 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மற்றும் நான்காவது நாட்களில் வானிலை சற்று சீரடையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஐந்தாவது நாளில் 40% மழைக்கு வாய்ப்புள்ளது. இது ஆட்டத்தின் சில பகுதிகளை பாதிக்கக்கூடும்.
ஈரப்பதமான வானிலை காரணமாக, போட்டியின் முதல் நாளில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் நிலவும். மேகமூட்டமான வானிலையும் அவர்களுக்கு கைகொடுக்கும். பொதுவாக ஓல்ட் டிராஃபோர்ட் ஆடுகளம் வறண்டு காணப்படும் என்பதால், குல்தீப் யாதவின் மணிக்கட்டு சுழற்பந்துவீச்சு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என மைக் ஆதர்டன் போன்ற முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், பிட்ச்சில் நிலவும் ஈரப்பதமான சூழலைக் கருத்தில் கொண்டு, நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக, வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஷர்துல் தாக்கூரை அணியில் சேர்க்க கேப்டன் சுப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் பரிசீலிக்கலாம். இந்த இக்கட்டான சூழ்நிலையில், இந்திய அணி சரியான வீரர்களைத் தேர்வு செய்து, இங்கிலாந்தின் சவாலை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.