மும்பை: இந்திய டெஸ்ட் அணி, அடுத்ததாக இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த நிலையில், இந்திய அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய டெஸ்ட் அணியிலிருந்து மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்தனர்.
இதை அடுத்து, ரோஹித் சர்மாவின் தொடக்க வீரர் இடத்தில் பேட்டிங் செய்யப்போவது யார், விராட் கோலியின் நான்காம் வரிசை இடத்தில் பேட்டிங் செய்யப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. சுப்மன் கில் தொடக்க வீரராக விளையாடுவார், கே.எல். ராகுல் நான்காம் வரிசையில் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அதற்கு நேர்மாறான தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, கே.எல். ராகுல், ரோஹித் சர்மாவின் இடத்தை நிரப்பும் வகையில் தொடக்க வீரராக விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல, இதுவரை தொடக்க வீரராகவும், மூன்றாம் வரிசையிலும் மட்டுமே விளையாடி வந்த சுப்மன் கில், இனி விராட் கோலியின் இடத்தை நிரப்பும் வகையில் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்வார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை சுப்மன் கில் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம், கே.எல். ராகுல் டெஸ்ட் போட்டிகளில் நான்காம் வரிசை, ஐந்தாம் வரிசை மற்றும் ஆறாம் வரிசைகளில் பேட்டிங் செய்திருக்கிறார். சமீப காலத்தில் மற்ற பேட்ஸ்மேன்களை விட மிடில் ஆர்டரில் ராகுல் சிறப்பாக விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்காம் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது சர்ஃபராஸ் கான் ஆகியோர் பேட்டிங் செய்ய வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருந்தது. மேலும், கருண் நாயருக்கும் வாய்ப்பளிக்கப்படலாம் என்ற செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், அவை அனைத்தும் தற்போது மாறியுள்ளன. அவர்கள் அனைவரும் அணியில் இடம் பெறுவார்களா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
சர்ஃபராஸ் கான் டெஸ்ட் அணியில் இடம் பெற்றாலும், ஐந்தாம் வரிசை அல்லது ஆறாம் வரிசையில்தான் பேட்டிங் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கருண் நாயர் அணியில் சேர்க்கப்படுவதே கடினம் என்ற நிலையில், ஒருவேளை சேர்க்கப்பட்டாலும் அவர் மாற்று வீரராகவே இருப்பார் எனத் தெரிகிறது. இதுதான் பிசிசிஐ வட்டாரத்திலிருந்து இந்திய டெஸ்ட் அணி குறித்து வெளியான தற்போதைய நிலவரம். இந்திய டெஸ்ட் அணி, மே 24ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.