மும்பை : டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட இந்திய அணி ஏப்ரல் 28ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
நடப்பாண்டு ஜூன் மாதம் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடக்கவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் இந்த உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை சில மாதங்களுக்கு முன்பாகவே வெளியிடப்பட்டுவிட்டது. இந்திய அணி இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அனைத்து லீக் போட்டிகளையும் அமெரிக்காவிலும், நாக் அவுட் போட்டிகளை வெஸ்ட் இண்டீஸிலும் விளையாடவுள்ளது.

இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியை தேர்வு செய்து அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் மே 1ஆம் தேதிக்குள் ஐசிசியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் மாற்றங்களை செய்ய மே 25ஆம் தேதி கடைசி நாளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடப்போகும் இந்திய வீரர்கள் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ஏற்கனவே டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இணைந்து தொடக்கம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் கேப்டன் ரோகித் சர்மா வதந்தி என்று விளக்கம் அளித்தார். தற்போது தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விடுமுறைக்காக விடுமுறைக்கு சென்றுள்ளதாகவும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சொந்த பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஏப்ரல் 27ஆம் தேதி டெல்லியில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடவுள்ளது. இந்த போட்டிக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த சந்திப்புக்கு பின் ஏப்ரல் 28ஆம் தேதி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இதில் ஏற்கனவே 10 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும் தகவல் வெளி வந்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஜடேஜா, சிராஜ், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஹர்திக் பாண்டியாவின் தேர்வு ஐபிஎல் தொடர் செயல்பாடுகளை பொறுத்து அமையும் என்று பார்க்கப்படுகிறது.
அதேபோல் அதிரடி வீரர்களான சிவம் துபே மற்றும் ரிங்கு சிங் இருவரில் யாருக்கு வாய்ப்பு என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. அதேபோல் கூடுதல் ஸ்பின்னருக்கான ரேஸில் ரவி பிஷ்னாய், அக்சர் படேல் மற்றும் சாஹல் ஆகியோர் இருப்பதாகவும், பேக் அப் விக்கெட் கீப்பருக்கான ரேஸில் கேஎல் ராகுல், இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரும் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரில் ஒருவர் மட்டுமே பேக் அப் தொடக்க வீரராகவும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.