மும்பை: இந்திய டெஸ்ட் அணி மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்க உள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா ஓய்வை அறிவித்து இருக்கிறார். மேலும், அதிக அனுபவம் வாய்ந்த வீரரான விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பிசிசிஐ-யிடம் தெரிவித்திருக்கிறார்.
இதை அடுத்து இந்திய டெஸ்ட் அணி இரண்டு அனுபவ வீரர்களை இழந்து இருக்கிறது. இனி இளம் தலைமுறை வீரர்கள் அதிக அளவில் விளையாட உள்ளனர். இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடப் போகும் இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது பற்றிப் பார்க்கலாம்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. ரோகித் சர்மா ஓய்வு பெற்று இருக்கும் நிலையில், துவக்க வீரர்களாக சுப்மன் கில்லும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனை ஆண்டு காலமாக சுப்மன் கில் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்து வந்தார். அவர் இனி துவக்க வீரராக விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்.
மூன்றாம் வரிசையில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இதற்கு முன் உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியிருக்கிறார். கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்திருக்கிறார். 2025 ஐபிஎல் தொடரிலும் அதிக ரன் குவித்த வீரராக இருக்கிறார். எனவே அவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்.
நான்காம் வரிசையில், விராட் கோலிக்கு இணையாக அனுபவம் வாய்ந்த ஒரு வீரர் விளையாட வேண்டும். அந்த இடத்திற்கு கே.எல். ராகுல் அல்லது ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த ஓராண்டாக இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பின்றி இருக்கிறார். அவருக்கு மீண்டும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அப்படி வாய்ப்பு கிடைத்தால், அவர் நான்காம் வரிசையிலும், கே.எல். ராகுல் ஐந்தாம் வரிசையிலும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம். ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது கருண் நாயர் ஆகிய இருவரில் ஒருவருக்கு மாற்று வீரராக பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும்.
விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் இருப்பார். மாற்று விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெல் இருப்பார். சர்பராஸ் கான் மாற்று வீரராக இடம்பெறுவார். அதன் பிறகு ஆல்ரவுண்டர்களாக நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு அணியில் இடம் கிடைக்கும். ஆல்ரவுண்டர் என்ற அடையாளத்தின் காரணமாக ஷர்துல் தாக்குருக்கு அணியில் இடம் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
வேகப்பந்துவீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம்பெறுவார்கள். அர்ஷ்தீப் சிங்குக்கும் வாய்ப்பு அளிக்கப்படலாம். ஆனால், ஷர்துல் தாக்குர் இடம் பெற்றால் இவருக்கு இடம் கிடைக்காது.
சுழற்பந்துவீச்சாளர்களாக குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம்பெறுவார்கள். ஏற்கனவே ரவீந்திர ஜடேஜாவும் இருப்பதால், மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள சாத்தியமான இந்திய அணி வீரர்கள் பட்டியல் (உத்தேச பட்டியல்):
சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரெல் (மாற்று விக்கெட் கீப்பர்), நிதீஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் / ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சர்பராஸ் கான் (மாற்று வீரர்), கருண் நாயர் (மாற்று வீரர்).