பாலி: சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்தவொரு பந்துவீச்சாளரும் செய்யாத இமாலய சாதனையை, இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த வீரர் கெடே பிரியாண்டனா நிகழ்த்திக் காட்டியுள்ளார். ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை அள்ளி, உலக கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
இந்தோனேஷியா மற்றும் கம்போடியா அணிகளுக்கு இடையே பாலியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தான் இந்த அதிசய சாதனை நிகழ்ந்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தோனேஷியா 168 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்திருந்தது.

சேஸிங்கில் இறங்கிய கம்போடியா அணி, 15 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்திருந்தது. கைவசம் விக்கெட்டுகள் இருந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு இருந்தது. அப்போது தான் கெடே பிரியாண்டனா பந்துவீச வந்தார். இதுதான் போட்டியில் அவர் வீசிய முதல் ஓவர். அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளில் 3 விக்கெட்களை சாய்த்தார். அதன்பின் கடைசி இரண்டு பந்துகளில் 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.
இப்படி ஒரே ஓவரில் கம்போடியா அணியின் மொத்த லோயர் ஆர்டரையும் காலி செய்தார் பிரியாண்டனா. இடையில் ஒரு வைடு மட்டும் சென்றது. அந்த ஓவரில் மட்டும் ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சரித்திர சாதனை படைத்தார். இதனால் கம்போடியா அணி நிலைகுலைந்து, 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதற்கு முன்பு உள்ளூர் டி20 போட்டிகளில் வங்கதேசத்தின் அல்-அமின் ஹொசைன் (2013) மற்றும் கர்நாடகாவின் அபிமன்யு மிதுன் (2019) ஆகியோர் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஆனால், சர்வதேச டி20 போட்டிகள் என்று வரும்போது, ஆண்கள் அல்லது பெண்கள் என யாராக இருந்தாலும், ஒரே ஓவரில் 5 விக்கெட் வீழ்த்தியது இதுவே முதல்முறை.
லசித் மலிங்கா, ரஷித் கான் போன்ற ஜாம்பவான்கள் கூட 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர். ஆனால், ஒரே ஓவரில் 5 விக்கெட் என்ற சாதனையை பிரியாண்டனா தான் முதலில் படைத்துள்ளார்.
பந்துவீச்சில் பிரியாண்டனா உலக சாதனை படைத்தார் என்றால், பேட்டிங்கில் இந்தோனேஷியாவின் விக்கெட் கீப்பர் தர்மா கெசுமா அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 68 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 110 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். குட்டி அணியான இந்தோனேஷியா செய்த இந்தச் சம்பவம், இப்போது கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.