கொழும்பு : இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன 2023 ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டி கொழும்பு பிரேமதேசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித், சுப்மன் கில் அபாரமாக ஆடி அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர். அடுத்து 25வது ஓவரின் போது மழையால் போட்டி தடைபட்டது.
அதுவரை இல்லாத மேகங்கள் திடீரென சூழ்ந்து வானம் இருண்டது. மைதான ஊழியர்கள் சுதாரிக்கும் முன்பே மழை கொட்டத் துவங்கியது. மைதானத்தை மூடும் உறைகளை எடுத்துக் கொண்டு ஊழியர்கள் விரையும் முன்பே மழை அதிகமானது.

அதிக நபர்கள் இல்லாத காரணத்தால் உறைகளை வேகமாக இழுக்க முடியாமல் திணறினர். அப்போது பாகிஸ்தான் அணி வீரர் பக்கார் ஜமான் அவர்களுக்கு உதவியாக உறைகளை இழுத்துச் சென்றார்.
மற்ற வீரர்கள் யாருக்கும் ஊழியர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. ஆனால், ஜமான் அவர்களுக்கு உதவி செய்தது இந்தப் போட்டியில் நெகிழ்ச்சியான சம்பவமாக அமைந்தது.
கடும் மழை பெய்த போதும் மழையில் நனைந்து கொண்டே அவர் இந்த உதவியை செய்தார். அவருக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மழை வரும் முன் இந்திய அணி 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்து இருந்தது. ரோஹித் சர்மா 49 பந்துகளில் 56 ரன்களும், சுப்மன் கில் 52 பந்துகளில் 58 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். விராட் கோலி, ராகுல் களத்தில் இருந்தனர்.