3வது டெஸ்ட் போட்டி
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் தொடங்கவுள்ளது. இது பகலிரவு போட்டியாக நடத்தப்படுகிறது. இந்திய அணி விளையாடும் 2வது பகலிரவு டெஸ்ட் போட்டி இதுவாகும். இதற்கு முன்னர் இந்திய அணி ஒரே ஒரு முறை வங்கதேசத்துடன் பகலிரவு போட்டியில் ஆடியுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்கள்
முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக பிட்ச் இருந்தது. ஆனால் இம்முறை புற்கள் அதிகளவில் போடப்பட்டு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பிட்ச் சாதகமாகலாம் எனக் கூறப்படுகிறது.
எச்சரிக்கை
இப்போட்டி குறித்து பேசியுள்ள ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் பந்தை எறிய தயாராக உள்ளனர். வலைப்பயிற்சியில் இவர்களின் பந்துவீச்சு மிகவும் ஆபத்தானதாக உள்ளது. பேட்ஸ்மேன்கள் காயப்பட வேண்டியிருக்கும். என இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாருக்கு வெற்றி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து ஏற்கனவே நுழைந்து விட்டது. இந்நிலையில் மற்றொரு அணியாக நுழைவதற்கு இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் பிரகாசமான வாய்ப்புள்ளது. இங்கிலாந்து அணி 3வது டெஸ்டில் தோற்றால் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு பறிபோகும். இதனால் இரு அணிகளும் கடுமையாக போராடும்.