மும்பை: சஞ்சு சாம்சனுக்கு திறமை இருந்தும் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதாகக் கூறப்படும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் புறக்கணிக்கப்பட்டது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த அநீதிக்கு எதிராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், பிரதான விக்கெட் கீப்பரான கே.எல். ராகுலுக்கு மாற்று வீரராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான குழு, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, இளம் வீரர் துருவ் ஜுரலுக்கு முதல் முறையாக ஒருநாள் அணியில் வாய்ப்பளித்துள்ளது.
சஞ்சு சாம்சன், தான் விளையாடிய கடைசி ஒருநாள் போட்டியில் (தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக) சதமடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டவர். அப்படிப்பட்ட ஒரு வீரரை அடுத்த தொடரிலேயே நீக்கியதுதான் தற்போது சர்ச்சையின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.
இந்த முடிவு குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், தேர்வுக்குழுவின் செயல்பாட்டைக் கடுமையாகச் சாடினார். "இது மீண்டும், மீண்டும் நடக்கும் அநியாயம். சஞ்சு சாம்சன் நிச்சயம் அணியில் இருந்திருக்க வேண்டும். அவர் தனது கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்திருக்கிறார் என்பதை மறந்துவிடக் கூடாது. ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு நாளும் காரணங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன."
"ஒருநாள் சஞ்சு சாம்சனை 5-வது இடத்தில் பேட்டிங் செய்யச் சொல்கிறீர்கள், இன்னொரு நாள் தொடக்க வீரராகக் களமிறக்குகிறீர்கள். சில சமயங்களில் 7 அல்லது 8-வது இடத்திற்குத் தள்ளுகிறீர்கள். திடீரென துருவ் ஜுரல் எப்படி அணிக்குள் வந்தார்? சஞ்சு ப்ளேயிங் லெவனில் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். ஆனால், மாற்று வீரருக்கான முதல் வாய்ப்பு அவருக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும்" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஸ்ரீகாந்த்.

சஞ்சு சாம்சனின் நீக்கம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அஜித் அகர்கர், "இது முழுக்க முழுக்க பேட்டிங் வரிசை சம்பந்தப்பட்ட முடிவு. சஞ்சு சாம்சன் ஒரு டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன். அவர் சதம் அடித்தபோது கூட, நம்பர் 3-ல் தான் பேட்டிங் செய்தார் என்று நினைக்கிறேன். ஆனால், துருவ் ஜுரல் வழக்கமாக லோயர்-ஆர்டரில் பேட்டிங் செய்யக்கூடியவர். கே.எல். ராகுலும் அந்த இடத்தில்தான் ஆடுகிறார். எனவே, அந்த இடத்திற்குப் பொருத்தமான வீரர்களை நாங்கள் தேடுகிறோம். இது பேட்டிங் பொசிஷன் சம்பந்தப்பட்டதே தவிர, வேறு ஒன்றுமில்லை" என்று கூறினார்.
அஜித் அகர்கர் கூறிய காரணம், புள்ளிவிவரங்களோடு சுத்தமாகப் பொருந்தவில்லை என்பதுதான் இங்கே அதிர்ச்சியளிக்கும் உண்மை. சஞ்சு சாம்சன் இதுவரை 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 56.66 என்ற அபாரமான சராசரியை வைத்துள்ளார். இதில் முக்கியமாக, அவர் நம்பர் 4 முதல் 6 வரையிலான மிடில்-ஆர்டர் இடங்களில் 11 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து, 57.83 என்ற சராசரியுடன் 347 ரன்களைக் குவித்துள்ளார்.
இப்படி மிடில்-ஆர்டரில் சிறப்பாகச் செயல்பட்ட ஒரு வீரரை, "அவர் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்" என்று கூறி நீக்கியிருப்பது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வியை ஸ்ரீகாந்த் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் எழுப்புகின்றனர். ஒவ்வொரு முறையும் சஞ்சு சாம்சனை நீக்குவதற்கு ஒரு புதிய காரணம் கண்டுபிடிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.