
டி20 உலகக்கோப்பை தொடர்
2007ம் ஆண்டுக்கு பிறகு, 15 ஆண்டுகளாக டி20 உலகக்கோப்பையை வெல்வதற்காக காத்துக்கொண்டுள்ள இந்திய அணி இந்த முறை ரோகித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. கோலி, சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா என அனைவரும் நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்திய அணி அசுர பலம் பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ஐநாக்ஸின் ஏற்பாடு
இந்நிலையில் ரசிகர்கள் இந்த உலகக்கோப்பையை நன்கு பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக ஸ்பெஷல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஐநாக்ஸ், டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் நேரலையாக திரையிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக ஐசிசியுடன் ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.

எத்தனை நகரம்
இந்தியாவின் 75 நகரங்களில் ஐநாக்ஸ் திரையரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் இருந்து 25 நகரங்களில் போட்டிகளை திரையிடவுள்ளனர். இதில் சென்னை, கோவை நகரங்களும் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. பெரிய திரையில், அட்டகாசமான சவுண்ட் தரத்தில் போட்டிகளை பார்ப்பதற்கு மிகச்சிறப்பாக இருக்கும் என ரசிகர்களுக்கு ஐநாக்ஸ் அறிவித்துள்ளது.

முதல் லீக் போட்டி
குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் போட்டியாக வரும் அக்டோபர் 23ம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. கடந்தாண்டு டி20 உலகக்கோப்பையில் பெற்ற தோல்விக்கு பழிதீர்க்க இந்திய வீரர்கள் முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











