பாட்னா: ஐபிஎல் தொடரில் 14 வயதில் அதிவேக சதம் அடித்து கிரிக்கெட் உலகையே மிரள வைத்து இருக்கும் வைபவ் சூர்யவன்ஷியின் வளர்ச்சியில் அவரது தந்தையின் பங்கு மிகவும் அதிகம். நான்கு வயதில் இருந்தே வைபவ் சூர்யவன்ஷியின் திறமையை அடையாளம் கண்டு அதற்காக மிகப்பெரிய தியாகத்தையும் செய்திருக்கிறார் அந்த விவசாயி.
வைபவ்வின் தந்தை பெயர் சஞ்சீவ் சூர்யவன்ஷி ஆவார். அவரும் இளம் வயதில் கிரிக்கெட் வீரராக இருந்தார். ஆனால், அதில் அவரால் பெரிய முன்னேற்றத்தை அடைய முடியவில்லை. விவசாய பின்னணியை கொண்ட குடும்பத்தில் பிறந்த அவரால் கிரிக்கெட்டுக்கு அதிக பணம் செலவு செய்ய முடியவில்லை. அதன் பிறகு அவர் விவசாயத்தை கவனித்து வந்தார்.

பின்னர் நான்கு வயதான தனது மகன் வைபவ் சூர்யவன்ஷி பிளாஸ்டிக் பந்தில் கிரிக்கெட் விளையாடிய போது, அதிரடியாக பந்துகளை அடிப்பதை பார்த்தார் சஞ்சீவ் சூர்யவன்ஷி . உடனடியாக அவர் ஒரு வேலையை செய்தார். தனது விவசாய நிலத்தில் ஒரு பகுதியை சிறிய மைதானம் போல மாற்றினார். அதில் தனது மகனுக்கு தினமும் பிளாஸ்டிக் பந்தில் பந்து வீசி பயிற்சி அளித்தார்.
அதன் பிறகு அருகில் இருந்த சிறுவர்களையும் அழைத்து தனது மகனுடன் கிரிக்கெட் விளையாடுமாறு கூறினார். அதற்கேற்ற வசதிகளையும் செய்து கொடுத்தார். அப்போது வைபவ் ஆடிய ஆட்டத்தை பார்த்த அவர் தன்னை போல தனது மகனும் கிரிக்கெட்டில் முன்னேற முடியாமல் தவித்து விடக் கூடாது என முடிவு செய்தார்.
அதன் பிறகு அவர்கள் இருந்த சமஸ்திபூர் நகரில் இருந்த கிரிக்கெட் பயிற்சி மையத்தில் தனது மகனை சேர்த்து விட்டார். ஆனால் அது அவருக்கு போதுமானதாக இல்லை என்பதால், ஒன்பது வயதில் பீகார் தலைநகர் பாட்னாவில், முன்னாள் ரஞ்சி டிராபி வீரர் மணிஷ் ஓஜா நடத்தி வந்த பயிற்சி மையத்தில் தனது மகனை சேர்த்தார்.
சமஸ்திபூரில் இருந்து பாட்னா 90 கிலோமீட்டர் தூரம் ஆகும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அவரது பயிற்சி மையத்தில், காலை 7:30 மணி முதல் மாலை வரை வைபவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், இந்த 90 கிலோமீட்டர் தூரத்திற்கு தனது மகனை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக, ஒரு சிறிய காரையும் அவர் வாங்கி இருக்கிறார்.
அதிகாலை 4 மணிக்கு வைபவின் தாய், அவர்களுக்கு வேண்டிய உணவை தயார் செய்து அளிப்பார். அவர்கள் அதிகாலையிலேயே சமஸ்திபூரில் இருந்து பாட்னாவுக்கு செல்வார்கள். அங்கு வைபவ் சூர்யவன்ஷி ஒருநாள் முழுவதும் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடுவார். இவ்வாறாக நான்கு வருடங்களை செலவிட்டிருக்கிறார் சஞ்சீவ் சூர்யவன்ஷி.
தனது மகனின் பயிற்சி செலவுகளுக்காக தனது நிலங்களில் பல பகுதிகளையும் விற்று இருக்கிறார் சஞ்சீவ். அதனால் அவர் நிதி சிக்கலில் மாட்டிக் கொண்டார். ஆனால், அதே சமயம்தான் வைபவ் சூர்யவன்ஷிக்கு பீகார் மாநில அளவிலான அண்டர் 19 அணியில் வாய்ப்பு தேடி வந்தது. அதனால் தனது நிதிப் போராட்டங்களை மறைத்துக் கொண்டு, மகனுக்காக சஞ்சீவ் சூர்யவன்ஷி பல சிக்கல்களை எதிர்கொண்டார்.
12 வயதில் பீகார் மாநில அண்டர் 19 கிரிக்கெட் அணியில் அவர் இடம் பிடித்தார். அங்கிருந்துதான் வைபவ் சூர்யவன்ஷிக்கு தேசிய அளவில் கவனம் கிடைத்தது. இந்திய அண்டர் 19 அணியிலும் இடம் பிடித்தார். அதன் பிறகு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ. 1.1 கோடிக்கு வாங்கப்பட்டார். இந்த நிலை வரும் வரை வைபவுக்கு அவரது தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி தூணாக இருந்து மிகப் பெரும் உதவிகளை செய்திருக்கிறார்.