சென்னை : இந்திய உலகக்கோப்பை அணியில் அக்சர் பட்டேல் நீக்கப்பட்டார். அவருக்கு பதில் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில், தனது நீக்கம் குறித்து அக்சர் பட்டேல் சூசகமான இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை வெளியிட்டது போல ஒரு போலி பதிவு வலம் வருகிறது.
அந்த போலி பதிவில் அஸ்வின் பெயரை குறிப்பிடாமல் தான் அக்சர் பட்டேல் கூறுவது போல சயின்ஸ் குரூப் எடுத்திருந்தால் அணியில் இடம் பிடித்து இருக்க முடியும் என கூறி இருக்கிறார்.

அஸ்வினை "கிரிக்கெட் சயின்டிஸ்ட்" என சிலர் முன்னாள் வீரர்கள் முன்பு அழைத்துள்ளனர். அதை வைத்து தான் அந்த போலி பதிவில் அஸ்வின் போல தான் கிரிக்கெட் சயின்டிஸ்ட் ஆக மாறி இருக்க, காமர்ஸ் படிக்காமல், சயின்ஸ் படித்து இருக்க வேண்டும் என அக்சர் பட்டேல் கூறுவது போன்ற வாசகம் உள்ளது.
மேலும், அந்த போலி பதிவில் தான் நல்ல செய்தித் தொடர்பாளரை வைத்திருக்க வேண்டும் எனவும் ஒரு வாசகம் உள்ளது. அதாவது அஸ்வின் செய்தித் தொடர்பாளர்களை வைத்தோ அல்லது யூட்யூப் போன்ற சமூக ஊடகங்களில் தொடர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதன் மூலமாகவோ அஸ்வினை உலகக்கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோஷத்தை சமூக ஊடகங்களில் ஏற்படுத்தி விட்டார் என்பதே அதன் அர்த்தம்.

இதில் உச்சகட்டமாக எலும்புக் கூடு ஒன்று தன் இதயத்தை எடுத்து கொடுப்பது போன்ற படத்தையும் பகிர்ந்துள்ளார் அந்த போலி பதிவை பகிர்ந்தவர். இந்த பதிவை உண்மை என நம்பி ஏராளமானோர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், அக்சர் பட்டேலின் ஊடக நண்பர் ஒருவர் இது போலி பதிவு என விளக்கம் அளித்துள்ளார்.