இஸ்லாமாபாத்: கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டாம் என்று இந்தியா எடுத்த முடிவு மிகச் சரியானது தான் என்று இன்சமாம் உல் ஹக் கூறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக நேற்று (செப்.10) கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கவிருந்த நிலையில், இந்திய அணி நிர்வாகிகள் மத்தியில் கொரோனா தொற்று பரவியதால் ஆட்டம் டாஸ் போடுவதற்கு முன்பே ரத்து செய்யப்பட்டது.
ரசிகர்கள் இப்போட்டியை பெரியளவில் எதிர்பார்த்திருந்த நிலையில் போட்டியை ரத்து செய்யும் இக்கட்டான முடிவை இரு அணி நிர்வாகங்களும் சேர்ந்து எடுத்தன.

இதனால், ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர். ரசிகர்கள் மட்டுமின்றி, இந்த இறுதிப் போட்டியை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். காரணம், இத்தொடரில் இந்தியா வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம். டெஸ்ட் தொடரில் 2-1 என்று இந்தியா முன்னிலையில் இருந்தது. இங்கிலாந்து அணி, இந்தியாவிடம் இருந்து இப்படியொரு தாக்குதல் ஆட்டத்தை எதிர்பார்க்கவில்லை. இந்திய அணியை குறைத்து மதிப்பிட்டது. இதனால், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளை வென்று இந்திய கம்பீரமாய் ஒளிர்ந்தது. தொடரை கைப்பற்ற பிரகாசமான வாய்ப்பு இருந்த நிலையில், கடைசி டெஸ்ட் ரத்து செய்யப்பட்டது அனைவரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.
எனினும், இந்திய அணி ஐபிஎல் காரணமாகவே கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட மறுத்துவிட்டதாக சமூக தளங்களில் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இன்னும் கூட பலரும், ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாமல் போய்விடுமோ என்று வீரர்கள் பயந்ததன் காரணமாகவே, கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதாக பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக, லண்டன் ஓவலில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியின் போது அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால், அவர்கள் 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிசியோதெரஃபிஸ்ட் நிதின் பட்டேலும் தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்த சூழலில், இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பிசியோதெரஃபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருடன் இந்திய வீரர்கள் நெருங்கி பணியாற்றியதால், இந்திய அணியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நடைமுறைப்படி இந்திய அணியினர் அனைவரும் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் வீரர்கள் யாருமே பயிற்சியில் ஈடுபடவில்லை. இறுதியில் 5 வது டெஸ்ட் போட்டி முழுவதும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்-ஹக் தனது யூடியூப் சேனலில் இதுகுறித்து பேசுகையில், "இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்தாவது டெஸ்ட் கோவிட் காரணமாக தொடர முடியாதது துரதிர்ஷ்டவசமானது. இது இந்தியாவுக்கு மிகச்சிறந்த தொடராக அமைந்துள்ளது. நான்காவது டெஸ்ட் போட்டியில் பயிற்சியாளர் மற்றும் இதர நிர்வாகிகள் இல்லாமல் இந்திய அணி விளையாடியது. ஆனால் அவர்கள் களத்தில் மிகுந்த உறுதியைக் காட்டினார்கள்.
இப்போது, சமீபத்திய நாட்களில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளித்த அவர்களின் பிஸியோவுக்கு கூட கொரோனா உறுதியாகியுள்ளது. அந்த பிஸியோ தான் அனைத்து வீரர்களுக்கும் முழு பயிற்சி அளித்தார். இதனால் வீரர்கள் கலக்கத்தில் உள்ளனர். இப்போது மேற்கொண்ட சோதனையில் வீரர்களுக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலும் கோவிட் அறிகுறிகள் 2-3 நாட்களுக்குப் பிறகு தெரிய ஆரம்பிக்கும்.
இந்திய அணிக்கு உதவி புரியும் நிர்வாகிகள் இன்றி விளையாடுவது மிகவும் கடினம். நீங்கள் காயமடையும் போதோ அல்லது ஒரு வலியை அனுபவிக்கும் போதோ, உங்களை உடனே குணமடையைச் செய்ய ஒரு பிஸியோ தேவை. அனைத்து வீரர்களும் உடற்தகுதியுடன் இருந்தபோதிலும் இந்தியா ஏன் டெஸ்ட் போட்டியில் விளையாட மறுப்பு தெரிவித்து வெளியேறியது? என்று மக்கள் யோசிக்க வேண்டும். உடலமைப்பு மற்றும் பயிற்சியாளர்கள் மிகவும் முக்கியம். ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு நாள் விளையாட்டு முடிந்ததும், பிசியோவின் வேலை தொடங்குகிறது. அவர் வீரர்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் மற்றும் வரவிருக்கும் நாட்களில் வீரர்கள் புத்துணர்ச்சியுடன் சிறப்பாக களமிறங்குவதற்கு ஏற்ப அவர்களை வைத்திருக்க வேண்டும். எனவே இந்திய வீரர்களுக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்த பிறகும், கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் வெளியேறிவிட்டது என்று கூறுவது தவறு" என இன்சமாம் கூறியுள்ளார்.