
அபார வாய்ப்பு
நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 183 ரன்கள் எடுக்க, இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 278 ரன்கள் எடுத்தது. பிறகு இங்கிலாந்து இரண்டாம் இன்னிங்ஸில் கேப்டன் ஜோ ரூட் சதம் மூலமாக 303 ரன்கள் எடுத்தது. இந்தியாவுக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. என்னதான் இங்கிலாந்து வலிமையான பவுலிங் லைன் அப் கொண்டிருந்தாலும், இந்தியா நிச்சயம் இந்த டார்கெட்டை 9 விக்கெட்டை இழந்தாவது எட்டியிருக்கவே வாய்ப்புகள் அதிகம். இத்தனைக்கும் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. ஸோ, கடைசி நாளில் நிறுத்து நிதானமாக விளையாடியிருந்தாலே இந்தியா ஜெயித்திருக்கும். அப்படியொரு அருமையான வாய்ப்பு இந்தியாவுக்கு கை நழுவிப் போனது.

இந்தியா மாறிவிட்டது
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் யூடியூப்பில் இந்திய அணியின் செயல்பாடு குறித்துப் பேசியுள்ளார். அதில், "இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை விட இந்தியாவே முன்னோக்கி செல்லும் என்று நினைக்கிறேன். முதல் டெஸ்டில் அவர்களின் செயல்திறன் காரணமாக நான் இதைச் சொல்லவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில், அந்த அணியில் இடம் பிடித்த இளம் வீரர்களால் நான் அப்படி உணர்கிறேன். இந்த இளம் வீரர்களில் பெரும்பாலானோரின் சிறந்த பண்பு என்னவென்றால், அவர்கள் எல்லா நிலைகளிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள். கடந்த காலங்களில் இந்திய அணியினர் சொந்த மண்ணில் தான் நன்றாக விளையாடுவார்கள், ஆனால் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் அவர்களால் சிறப்பாக விளையாட முடியாது. ஆனால் இந்த இளைஞர்கள் வந்த பிறகு, வெளிநாட்டு டூர்களில் கூட இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அசத்தும் ரிஷப் பண்ட்
குறிப்பாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடர் வெற்றிக்கு பிறகு, இந்திய அணி வீரர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அணியில் உள்ள முக்கிய பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்காவிட்டாலும் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படுவதில்லை. அணியில் பெரிய தாக்கமும் ஏற்படுவதில்லை. அணியில் உள்ள இளம் வீரர்கள் சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டு விடுகின்றனர். நான் தனிப்பட்ட முறையில் ரிஷப் பண்ட்டின் பேட்டிங்கைப் பார்க்க ஆசைப்படுகிறேன். அவர் விளையாடும் விதம் அட்டகாசமாக இருக்கிறது. முதல் டெஸ்ட்டில் துரதிர்ஷ்டவசமாக சீக்கிரமே ஆட்டமிழந்துவிட்டார். ஆனால், கடினமான சூழலிலும் ரிஷப் பண்ட் தனது இயல்பான ஆட்டத்தைதான் வெளிப்படுத்த வேண்டும். இப்போது ஆடுவது போன்றே அவர் ஆட வேண்டும்.

தடுமாறும் மிடில் ஆர்டர்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர்கள் கடும் சவால் அளிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். மீதமுள்ள 4 டெஸ்ட் போட்டிகளும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை" என்று கூறியுள்ளார். உண்மை தான். இன்சமாம் கூறியிருப்பது முற்றிலும் உண்மை தான். ஆனால், இந்தியாவின் மிடில் ஆர்டரை நினைத்தால் தான் ஷாக்காக உள்ளது. புஜாரா, கோலி, ரஹானே என இந்தியாவின் ஆணி வேர் ஆட்டம் கண்டு வருகிறது. குறிப்பாக, புஜாரா பேட்டிங் மீது வெளிப்படையாகவே விமர்சனங்கள் எழத் தொடங்கிவிட்டன. மற்றபடி இந்திய அணியின் பெரும் பலமாக இருப்பது பேட்டிங்கை விட பவுலிங் தான் என்பதில் துளியும் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications











