இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இரண்டு பயிற்சிப் போட்டியில் சரியாக ஆடாத நிலையில் அந்த அணியின் முன்னாள் கேப்டனும், தேர்வுக் குழு தலைவருமான இன்சமாம் உல் ஹக் வீரர்களை சந்திக்க இந்தியா கிளம்பி வர உள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தியா வந்ததில் இருந்து இரண்டு பயிற்சிப் போட்டியில் ஆடி உள்ள பாகிஸ்தான் அணி இரண்டிலும் சொல்லிக் கொள்ளும்படி ஆடவில்லை.

அதற்கு பதிலாக பாகிஸ்தான் வீரர்கள் உயர்தர அசைவ உணவகத்தில் சாப்பிட்ட வீடியோ வெளியாவதும், அந்த அணியின் முன்னணி வீரர் ஷதாப் கான் பேட்டிகளில் தொடர்ந்து தாங்கள் பிரியாணி சாப்பிட்டதால் பீல்டிங்கில் சொதப்புகிறோம் என்றும், உணவகத்தில் நாங்கள் சிக்கன், மட்டனை சாப்பிட்ட வேகத்தை பார்த்து பயிற்சியாளர்கள் பயந்தனர் என்றும் கூறி எதற்காக இந்தியா வந்தோம் என்பதையே மறந்தது போல சிரித்துக் கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் அணி கேப்டனும், அந்த அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களுள் ஒருவராக விளங்கிய இன்சமாம் உல் ஹக் இந்தியா கிளம்பி வர இருக்கிறார். அவர்தான் பாகிஸ்தான் அணியின் தலைமை தேர்வுக் குழு தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாக தேர்வுக் குழு தலைவர் உலகக்கோப்பை போன்ற நீண்ட தொடர்களில் அணியுடன் பயணிப்பதில்லை. அவ்வப்போது வந்து விட்டு சென்று விடுவார்கள். ஆனால், இந்த முறை இன்சமாம் இந்தியா வருவது பற்றி பல்வேறு ஊகங்கள் கிளம்பி இருக்கின்றன.
பாகிஸ்தான் அணியில் ஏற்கனவே பாபர் அசாம் மற்றும் மூத்த வீரர்கள் இடையே பிளவு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆடுகளத்தில் பாபர் அசாம் உடன் எந்த வீரரும் பேசுவதில்லை என முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர்.
மறுபுறம் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய ஷதாப் கான் போன்ற முன்னணி வீரர், பிரியாணி சாப்பிட்ட கதையையும், அதிகமாக சாப்பிட்டதால் குண்டாகி விடுவோம் என பயிற்சியாளர் பயந்தார் என்றும் கூறிக் கொண்டு இருக்கிறார். ஒரு முறை சொன்னால் இது வேடிக்கையாக இருக்கும். ஆனால், ஷதாப் கான் ஒவ்வொரு பேட்டியிலும் சாப்பாட்டை பற்றியே பேசி வரும் நிலையில், இது வேடிக்கை அல்ல, சில பாகிஸ்தான் வீரர்களின் "வாடிக்கை" என்பது தெளிவாகிறது.
வெளியே என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அது தனிப்பட்ட வீரர்களின் உரிமை. ஆனால், களத்தில் அணிக்காக ஒரு வீரர் என்ன செய்கிறார் என்பதுதான் முக்கியம். அதில் பாகிஸ்தான் வீரர்கள் பலர் கோட்டை விட்டுள்ளனர். பாகிஸ்தான் அணியின் பலமே பந்துவீச்சு தான்.
ஆனால், இரண்டு பயிற்சி போட்டியிலும் அந்த அணி படுமோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருக்கிறது. இன்சமாம் உல் ஹக் அணியில் நிலவும் பிளவையும், ஏனோதானோ என்று ஆடும் வீரர்களையும் சரி செய்யவே இந்தியா வருகிறார் என கூறப்படுகிறது. நிச்சயம் மோசமாக ஆடி வரும் பாகிஸ்தான் வீரர்கள் கிலியில் இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.