
கடும் முயற்சி
2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மார்ச் 29 அன்று துவங்க வேண்டிய தொடர் லாக்டவுன், விசா கெடுபிடிகள் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ கடும் முயற்சி செய்து வருகிறது.

வெளிநாடுகளில் ஐபிஎல்
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஐபிஎல் நடப்பது சந்தேகமாக உள்ளது. அதே சமயம், வெளிநாடுகளில் ஐபிஎல் தொடரை நடத்த வாய்ப்பு உள்ளது. இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் ஐபிஎல் நடத்த வருமாறு அழைப்பு விடுத்துள்ளன.

சிக்கல்
இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் உலகம் முழுவதும் இன்னும் ஒரீரு மாதங்களில் துவங்க உள்ளது. அந்த காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்தினால் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும். இந்த சிக்கலை தீர்க்க டி20 உலகக்கோப்பையை சார்ந்து இருந்தது பிசிசிஐ.

ஆஸ்திரேலியா முடிவு
2020 டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் - நவம்பரில் நடக்க இருந்தது. அந்த தொடரை நடத்த வேண்டிய ஆஸ்திரேலியா தங்களால் இப்போது உள்ள சூழ்நிலையில் உலகக்கோப்பை நடத்த முடியாது என ஐசிசியிடம் தெரிவித்துள்ளது. எனவே, உலகக்கோப்பை தொடரை தள்ளி வைப்பதை தவிர வேறு வழியில்லை.

தாமதம் செய்யும் ஐசிசி
ஐசிசி அதற்கான அறிவிப்பை வெளியிடாமல் தள்ளி வைத்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு காரணம் ஐபிஎல் தொடரை நடத்த விடாமல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் என பிசிசிஐ அதிகாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மிரட்டல்
இது ஒருபுறம் என்றால், டி20 உலகக்கோப்பையை தள்ளி வைத்து விட்டு, சக்திவாய்ந்த பிசிசிஐ அதே தேதிகளில் ஐபிஎல் தொடரை நடத்தினால் கேள்விகள் எழுப்பப்படும் என மற்றொரு பக்கம் இருந்து மிரட்டல் விடுத்துள்ளார் இன்சமாம் உல் ஹக்.

வதந்திகள் வருகின்றன
இன்சமாம் உல் ஹக் கூறுகையில், "டி20 உலகக்கோப்பை நடக்க உள்ள அதே தேதிகளில் ஐபிஎல் தொடர் மற்றும் இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் நடக்க உள்ளதாக வதந்திகள் வருகின்றன. அதனால், டி20 உலகக்கோப்பை நடக்காது என்றும் கூறுகிறார்கள்" என்றார்.

கேள்விகள் எழுப்பப்படும்
"இந்திய போர்டு மிகவும் சக்தி வாய்ந்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை கட்டுக்குள் வைத்துள்ளது. ஆஸ்திரேலியா தங்களால் கொரோனா வைரஸ் காரணமாக உலகக்கோப்பையை நடத்த முடியாது என்றால், அவர்கள் முடிவு எளிதாக ஏற்கப்படும். ஆனால், அதே நேரத்தில் வேறு தொடர்கள் நடந்தால் கேள்விகள் எழுப்பப்படும்" என மறைமுக மிரட்டல் விடுத்தார் இன்சமாம்.

ஐசிசி ஆதரிக்கக் கூடாது
மேலும், "ஐசிசி சர்வதேச போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தனியார் லீக் தொடர்களுக்கு (ஐபிஎல்) முக்கியத்துவம் அளிக்கக் கூடாது. அது இளம் வீரர்களை சர்வதேச போட்டிகளில் இருந்து விலகி, அந்த தனியார் லீக்குகளை நோக்கி செல்லத் தூண்டும்" எனவும் ஐசிசியை சாடி உள்ளார் இன்சமாம்.


Click it and Unblock the Notifications











