முடிவெடுக்க முடியலை
கொரோனா முடக்கம் காரணமாக ஐபிஎல் தொடர் இந்த வருடம் நடக்குா என்பது பெரும் குழப்பமாக உள்ளது. இதுவரை எந்த தெளிவான முடிவையும் கிரிக்கெட் வாரியத்தால் எடுக்கமுடியவில்லை. காரணம் கொரோனா தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால். எனவே போட்டித் தொடரை காலவரையின்றி ஒத்திவைக்கும் நிலைதான் தற்போதைக்கு உள்ளது.
எப்போது நடக்கும் ஐபிஎல்
இந்த நிலையில், ஐபிஎல் தொடரை அக்டோபர் - நவம்பரில் நடத்த திட்டமிட்டு வருவதாக ஒரு தகவல் வெளியானது. அதை சுருக்கமான முறையில் நடத்தவும் பிசிசிஐ திட்டமிடுவதாகவும் தகவல்கள் கூறின. ஆனால் அதை பிசிசிஐ தரப்பு மறுத்துள்ளது. ஏன் இந்த செய்தி பரவியது என்றால் ஆசியா கோப்பைத் தொடரை பாகிஸ்தானுக்குப் பதில் இலங்கையில் நடத்தத் திட்டமிட்டுள்ளனராம். அந்தப் போட்டித் தொடருக்காக ஐபிஎல்லை சுருக்கிக் கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகின.
சுருக்க மாட்டோம்
இதை்ததான் தற்போது பிசிசிஐ தரப்பு மறுத்துள்ளது. இதுகுறித்து அதன் அதிகாரி ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் கூறுகையில், இதெல்லாம் காமெடியா இருக்கு. அப்படி ஒரு திட்டமே பிசிசிஐயிடம் இல்லை. எந்தத் தொடருக்காகவும் ஐபிஎல்லை சுருக்கிக் கொள்ள மாட்டோம். அப்படி திட்டம் ஏதும் இல்லை. இதெல்லாம் கட்டுக்கதைகள். முழுத் தொடரை நடத்துவதே நமக்கு லாபகரமானது. வீரர்களும் கூட அதைத்தான் விரும்புவார்கள். எனவே நடந்தால் முழுமையான தொடராகவே அது இருக்கும் என்றார் அவர்.
நல்ல முடிவு எடுப்போம்
மேலும் அவர் கூறுகையில், சூழ்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். உலகம் முழுவதும் உள்ள நிலையையும் கவனித்து வருகிறோம். வீரர்கள், அணி நிர்வாகத்தினர், ரசிகர்கள் என அனைவரின் பாதுகாப்பும், ஆரோக்கியமும் முக்கியம். அதையும் மனதில் கொள்வோம். எல்லாவற்றையும் கவனித்து ஆய்வு செய்த பின்னரே முடிவுகள் எடுக்கப்படும். அதுவரை வெளியாகும் எல்லாமே கற்பனைச் செய்திகளே என்றார் அவர்.