தனக்கு கிடைத்த ஆட்ட நாயகன் விருதை சக வீரருக்கு கொடுத்து மகிழ்ந்த டிவில்லியர்ஸ்!
புனே: பெங்களூர் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் தனது மேன் ஆப் தி மேட்ச் விருதை சக ஆட்டக்காரர் மான்தீப் சிங்கிற்கு வழங்கியுள்ளார்.
ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் நேற்று, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை குவித்தது.

நல்ல பார்ட்னர்ஷிப்
கோஹ்லி, கெய்ல் உள்பட முதல் 3 விக்கெட்டுகளை 55 ரன்களுக்கு இழந்து தடுமாறிய பெங்களூர் அணி, இந்த அளவுக்கு ரன் குவிக்க காரணம், டிவில்லியர்ஸ் மற்றும் மான்தீப் சிங் நடுவேயான 113 ரன் பார்ட்னர்ஷிப்பாகும்.

ராஜஸ்தானை வீழ்த்தியது
டிவில்லியர்ஸ் 38 பந்துகளில் 66 ரன்களும், மான்தீப் சிங், 34 பந்துகளில் 54 ரன்களும் விளாசினர். இந்த ஸ்கோரின் உதவியுடன், ராஜஸ்தானை 71 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது பெங்களூர் அணி.

மான்தீப் சிங்
ஆட்ட முடிவில், டிவில்லியர்சுக்கு மேன் ஆப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய டிவில்லியர்ஸ் என்னை பொறுத்தளவில் மான்தீப் சிங்தான் மேன் ஆப் தி மேட்ச். அவருக்குதான் நான் எனது விருதை வழங்கப்போகிறேன் என்றார். அதே போல பரிசளிப்பு நிகழ்ச்சிகளுக்கு பிறகு விருதை மான்தீப்பிடம் டிவில்லியர்ஸ் கொடுத்துள்ளார்.

கொஞ்சமாதான் எதிர்பார்த்தேன்
மேலும் கூறிய டிவில்லியர்ஸ், பெங்களூர் அணி 140 ரன்கள்தான் எடுக்கும் என்று நினைத்திருந்தேன். 180 ரன்கள் எடுத்ததை என்னால் நம்ப முடியவில்லை என்றார். கோஹ்லி கூறுகையில், முதலில் பவுலிங் செய்திருக்கலாம் என்று ஒரு கட்டத்தில் யோசித்தேன். ஆனால், ஸ்கோர் உயர்ந்ததால் மகிழ்ச்சியடைந்தேன் என்றார்.


Click it and Unblock the Notifications