மும்பை: ஐபிஎல் போட்டியின் இடைவெளியில் காதலி அனுஷ்கா சர்மாவை விராட்கோஹ்லி சந்தித்தது ஐசிசிஐயின் நடத்தை விதிமீறலுக்கு எதிரானது என்பதால் இதற்கு விளக்கம் தருமாறு அவருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்த 55வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.

பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 1.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 2 ரன் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் வீரர்களும், ரசிகர்களும் மழை எப்போது விட்டு ஆட்டம் தொடங்கும் என்று ஆவலுடன் காத்து இருந்தனர்.
பலத்த மழை தொடர்ந்ததால் சுமார் 2.30 மணி நேரத்துக்கு பிறகு ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டன.
மழையால் ஆட்டம் தடைப்பட்டிருந்த போது, முக்கிய பிரமுகர்களுக்கான பாக்சில் அமர்ந்து ஆட்டத்தை பார்க்க வந்து இருந்த தனது காதலியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா இருந்த இடத்துக்கு சென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட்கோஹ்லி அவரை கட்டித் தழுவி முத்தம் கொடுத்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். இந்த காட்சி ஸ்டேடியத்தில் உள்ள அகன்ற திரையிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
போட்டியில் கடைசி பந்து வீசி முடிக்கப்படும் வரை வீரர்கள் யாரும், பார்வையாளர்களை சந்தித்து பேசக்கூடாது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தங்கள் வீரர்களுக்கு விரிவாக எடுத்துரைத்துள்ளது.
இந்த நிலையில் விராட்கோஹ்லி விதியை மீறி காதலியுடன் பேசியது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவினர் ஐ.பி.எல். நிர்வாகம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்துள்ளனர்.
இதனை அடுத்து விராட் கோஹ்லியிடம் விளக்கம் கேட்டு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டிருந்தாலும் டெக்னிக்கலாக ஆட்டம் நடைபெறுகிறது என்றுதான் அர்த்தம்.
மழை வந்தது என்பதற்காக வீரர்கள் தங்களது இடத்தை விட்டு அகன்று மற்றவர்களுடன் கலந்து கொள்ள முடியாது என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. விராட் கோஹ்லி அளிக்கும் விளக்கத்தை தொடர்ந்து அவர்மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும்.