ஐ.பி.எல். 2015: பஞ்சாப்பை பந்தாடியது டெல்லி அணி! 9 விக்கெட் வித்தியாசத்தில் 'செம' வெற்றி!
டெல்லி: 8 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை டெல்லி டேர்டெவில்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மிக எளிதாக வென்று மெகா வெற்றியை பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு களத்துக்கு வந்த ஜாகீர்கான் அபாரமாக பந்து வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
8-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று மாலை டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.
பஞ்சாப் அணியில் ஜாகீர்கான், சவுரவ் திவாரி சேர்க்கப்பட்டனர். முதல் முறையாக இந்த தொடரில் களம் இறங்கிய ஜாகீர்கான், காயத்தால் ஏறக்குறைய ஓராண்டு காலமாக எந்த சவாலான போட்டியிலும் ஆடாமல் ஒதுங்கி இருந்தார்.
டாஸ் ஜெயித்த டெல்லி கேப்டன் டுமினி முதலில் பஞ்சாப் அணியை பேட் செய்ய பணித்தார். இதையடுத்து ஷேவாக்கும், மனன் வோராவும் பஞ்சாப்பின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆட வந்தனர்.

ஜாகீர்கான் அபார பந்துவீச்சு
இவர்கள் ஜாகீர்கானின் ஆவேசமான பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சரண் அடைந்தனர். மறுபிரவேசத்திலும் அட்டகாசப்படுத்திய ஜாகீர்கான் தனது முதல் இரு ஓவர்களில் ஷேவாக், மனன்வோராவை தலா ஒரு ரன்னில் வெளியேற்றினார்.

4 விக்கெட் இழப்புக்கு 10 ரன்கள்
ஷான் மார்ஷ் 5 ரன்களிலும் விருத்திமான் சஹா 3 ரன்களிலும் அவுட் ஆகினர். வெறும் 10 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து பஞ்சாப் அணி மோசமான நிலையில் தத்தளித்தது.

118 ரன்கள்...
வேகப்பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர்-நிலே பஞ்சாப் அணியின் மிடில் வரிசையையும் சீர்குலைத்தார். இதனால் சிதறிப்போன அந்த அணியால் நிமிரவே முடியவில்லை. டேவிட் மில்லர் 42 ரன்கள், கேப்டன் ஜார்ஜ் பெய்லி 18 ரன்கள், அக்ஷர் பட்டேல் 22 ரன்கள் என தாக்குப் பிடித்து 100 ரன்களை அந்த அணி கடந்தது.
20 ஓவர்களில் பஞ்சாப் அணியால் 8 விக்கெட்டுக்கு 118 ரன்களே எடுக்க முடிந்தது. கவுல்டர்-நிலே 4 விக்கெட்டுகளும், ஜாகீர்கான் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

எளிதான வெற்றி
அடுத்து டெல்லி அணியின் இன்னிங்சை மயங்க் அகர்வாலும், ஸ்ரேயாஸ் அய்யரும் தொடங்கினர். எந்தவித சிரமமின்றி விளையாடிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 106 ரன்கள் திரட்டி வெற்றியை எளிதாக்கினர். அய்யர் 54 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த சீசனில் டெல்லி தொடக்க ஜோடி 50 ரன்களுக்கு மேலாக எடுத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
டெல்லி அணி 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணியினர் சொந்த ஊரில் விளையாடிய கடைசி போட்டி இதுதான். அதை வெற்றியுடன் முடித்து ரசிகர்களை குதூகலப்படுத்தி இருக்கிறார்கள். கவுல்டர்-நிலே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


Click it and Unblock the Notifications