சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, உலக சாதனையை படைக்க உள்ளது.
2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர்கள் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அப்போது முதலே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அனைத்து சீசன்களிலும் பங்கேற்று வருகிறது.

முதல் சீசனில் தொடங்கி தற்போது 8வது சீசன் வரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஒரே வீரர்தான் உள்ளார். அவர்தான் சென்னை ரசிகர்களால் செல்லமாக தல என்று கூப்பிடப்படும் மகேந்திரசிங் டோணி.
அனைத்து சீசன்களிலுமே, சென்னை, சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 2010 மற்றும் 2011ல் அடுத்தடுத்து ஐபிஎல் கோப்பைகளை சென்னை கைப்பற்றி அசத்தியது. பலமுறை, அரையிறுதி, பைனல்வரை சென்றுள்ளது. ஒரு சீசனிலுமே சொதப்பலாக ஆடியது இல்லை என்பதால், அதிகப்படியான போட்டிகளில் ஆடும் வாய்ப்பு சென்னைக்கு கிடைத்தது.
மும்பைக்கு எதிராக சென்னை அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ளபோட்டி, டோணி அணிக்கு 150வது டி20 போட்டியாகும். ஐபிஎல் தவிர்த்து, சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளில் சிஎஸ்கே ஆடியதும் இந்த கணக்கில் வந்துள்ளது. உலக டி20 கிரிக்கெட் அணிகளிலேயே, 150 போட்டிகளில் ஆடும் முதல் அணி சென்னை சூப்பர் கிங்ஸ்தான்.
இதற்கு அடுத்தபடியாக 144 போட்டிகளுடன், இங்கிலாந்தின் சோமர்செட் டி20 அணி 2வது இடத்திலும், 142 போட்டிகளுடன், மும்பை இந்தியன்ஸ் அணி 3வது இடத்திலும் உள்ளது.
சென்னை அணி ஆட்டம் ஒரு பார்வை:
இதுவரை ஆடிய போட்டிகள்-149
வெற்றி பெற்றவை- 91 போட்டிகள்
தோற்றவை- 57 போட்டிகள். அதில் 2 தோல்விகள் சூப்பர் ஓவரில் ஏற்பட்டவை.
ஒரு போட்டியில் ரிசல்ட் கிடைக்கவில்லை.