
எங்க ஊரு மெட்ராசு..நாங்கதானே அட்ரசு..
சென்னை சூப்பர் கிங்ஸ்... இந்த பெயரை கேட்டால், ஐபிஎல் போட்டியில் விளையாடும் எந்த ஒரு அணியாக இருந்தாலுமே வயிறு கலங்கும். 7 சீசன்களிலும், சீராக, சிறப்பாக ஆடிய ஒரே அணி சிஎஸ்கேதான். மற்ற அணிகள் சில சீசன்களில், அசத்தும், அடுத்த சீசனிலேயே கவிழ்ந்தடித்து விழுந்துவிடும். ஆனால் டோணி பாய்ஸ் என்றுமே ராக்ஸ்தான்.

சேப்பாக்கம் கோலாகலம்
இத்தகைய பெயருக்கும், புகழுக்கும் சொந்தக்காரரான சென்னை அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதலாவது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸை இன்று எதிர்கொள்கிறது. ஆட்டம் நடைபெற உள்ள சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியம் இப்போதே விழாக்கோலம் பூண்டுள்ளது. ரசிகர்கள் வருகையையொட்டி, மைதானம் அமைந்துள்ள பகுதியில், மாலையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது.

பேட்டிங்
டோணி தலைமையிலான சென்னை அணியின் மிகப்பெரிய பலம் அதன் பேட்டிங் வரிசை. நடந்து முடிந்த உலக கோப்பையில், எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக காட்சியளித்த நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லமும், அதிரடி வெஸ்ட் இண்டீஸ் வீரர் ட்வைன் ஸ்மித்தும், ஒப்பனிங்கில் இறங்கி எதிரணிகளை உதறலில் விட உள்ளனர்.
மெக்கல்லத்துக்கு தெரிந்ததெல்லாம், அடித்தல், நொறுக்குதல், விளாசுதல் மட்டுமே என்பதால், சிஎஸ்கே பேட்டிங் ரசிகர்களிடம் ஆர்வத்தை கிளப்பிவிட்டுள்ளது.

நாங்க இருக்கோம்
நல்ல ஃபார்மிலுள்ள தென் ஆப்பிரிக்காவின் டுப்ளசிஸ், புதுமாப்பிள்ளை ரெய்னா, டி20யில் மட்டும் நன்கு ஆடும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நடு வரிசையில் கல்லா கட்ட உள்ளனர். அதுமட்டுமா, உலகின் திறமையான ஃபினிஷிங் பேட்ஸ்மேன் டோணியும், ஆல்ரவுண்டர் அஸ்வினும், இறுதி கட்டத்தில் அணிக்கு முட்டுக்கொடுக்க பேட்டுடன் தயாராகவே உள்ளனர். ஹஸ்சிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது இன்னும் தெரியவில்லை.

பவுலிங்கிலும் அசத்தல்
சென்னை சூப்பர் கிங்சுக்கு எல்லா சீசனிலும் பந்து வீச்சு கொஞ்சம் டல்தான். ஆனால் இம்முறை, மோசமில்லை. கைல் அப்பாட், மோகித் ஷர்மா, நெக்ரா, ஈஸ்வர் பாண்டே ஆகியோரில் இருவர் வேகப்பந்து வீச்சையும், அஸ்வின், ரெய்னா, ஜடேஜா சுழற்பந்து டிபார்ட்மென்டையும் கவனித்துக்கொள்வார்கள்.

மறுபிறவி எடுத்துள்ள டெல்லி
மறுபக்கம், டெல்லி அணியின் நிலையோ மகா மோசமாக உள்ளது. டெல்லி அணி தான் ஆடிய கடைசி 30 ஆட்டங்களில் ஐந்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த இரு சீசன்களிலுமே, கடைசி இடம் பிடித்து வந்த அணியும், டெல்லிதான். ஆனால், இம்முறை அணி மொத்தமாக கலைக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

யுவராஜ் வருகை
டெல்லி அணிக்கு தென் ஆப்பிரிக்க அதிரடி வீர்ர் டுமினி கேப்டனாக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச ஏலத்தொகையான ரூ.16 கோடிக்கு யுவராஜ்சிங் வரவழைக்கப்பட்டுள்ளார். எப்படியும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற உத்வேகத்தில் டெல்லி அணி உள்ளது.

பவுலிங் கொஞ்சம் ஃடப்தான்
தென் ஆப்பிரிக்காவின் டிகாக், டுமினி, யுவராஜ்சிங், ஆல்பி மார்க்கல் போன்ற பேட்ஸ்மேன்களும், முகமது ஷமி, ஜாகீர் கான், இம்ரான் தாகிர் போன்ற பவுலர்களும் டெல்லிக்கு பலமாகும். ஆனால், ஆல்ரவுண்டர் ஆங்லோ மாத்யூஸ் இலங்கைக்காரர் என்பதால் சென்னையில் ஆட முடியாது. இது டெல்லிக்கு பின்னடைவாகும்.

இன்று இரவு
இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ள இந்த போட்டி சோனி மேக்ஸ்சில் ஹிந்தியிலும், சோனி சிங்சில் ஆங்கிலத்திலும் நேரடியாக ஒளிபரப்பாகிறது. ஒன்இந்தியா தமிழ் தளத்திலும், லேட்டஸ்ட் ஸ்கோர்கள் மற்றும் சுவாரசிய விஷயங்கள் அப்டேட் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications











