பெங்களூரு: ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங் எனப்படும் வார்த்தை சீண்டலுக்கு பெயர் பெற்றவர்கள். ஆனால், ஐபிஎல் தொடரில் ஆளுக்கொரு அணியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் ஆஸி. வீரர்கள் உள்ளதால், இந்த தொடரிலும் அதுபோன்ற ஸ்லெட்ஜிங் சக நாட்டு வீரர்கள் மத்தியில் வெடிக்குமா என்ற எதிர்பார்ப்பு (!) ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், மாஜி ஆஸி. வீரர் மைக்கேல் ஹஸ்சி, ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னர், பஞ்சாப்பில் மார்ஷ், ஜான்சன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்மித், வாட்சன் போன்றோர் இடம்பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான்-பஞ்சாப் அணிகளுக்கிடையேயான பரபரப்பான சூப்பர் ஓவர் ஆட்டத்தில், வாட்சனை முதல் பந்தில் பவுல்ட் செய்தார் ஜான்சன். இதுபோன்ற ஆக்ரோஷ சூழ்நிலையில், சக நாட்டு வீரர்கள் தங்களுக்குள் ஸ்லெட்ஜிங் செய்வீர்களா என்று ஷேன் வாட்சனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:
இதுவரை ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களுக்குள் வார்த்தைகளை சூடாக பரிமாறவில்லை. ஒரே அணியில் ஆடுபவர்கள் என்பதால், ஒருவர் மீது மற்றொருவர் மரியாதை வைத்துள்ளோம். ஒருவருக்கொருவர் புரிந்து வைத்துள்ளோம். எனவே எங்களுக்குள் தகராறு ஏற்படாது. நான் ஜான்சன் பந்தில் அவுட் ஆனதை கூட த்ரில்லாகத்தான் பார்த்தேன். இவ்வாறு வாட்சன் தெரிவித்தார்.
அவிங்க ரொம்ப தெளிவாதான் இருங்காங்கப்பு..