ஜெய்ப்பூர்: என்னதான் இருந்தாலும், என்னால், டிவில்லியர்ஸ் போல ஆட முடியாது என்று இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப்படுபவரும், தற்போதைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகருமான ராகுல் டிராவிட் தெரிவித்தார். மேலும் டி20 போட்டிகளை மேலும் சுவாரசியமாக்க சில யோசனைகளையும் அவர் வழங்கினார்.
பெண் குழந்தைகளை காப்போம் என்ற பெயரில் ராஜஸ்தான் அணி துவங்கியுள்ள முன்முயற்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் நிருபர்களிடம் ராகுல் டிராவிட் கூறியதாவது:

ராஜஸ்தான் அணி தான் பங்கேற்ற முதல் ஐந்து போட்டிகளிலும் அடுத்தடுத்து வெற்றி பெற்றது. ஆனால் இரு போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டது. 2 போட்டிகளில் மட்டும் தோற்றோம். அதுவும், பெங்களூருக்கு எதிரான தோல்வியை தவிர மற்ற போட்டிகள் அனைத்திலுமே ராஜஸ்தான் சிறப்பாக ஆடியது.
59 பந்துகளில் 133 ரன்கள் குவித்த டிவில்லியர்ஸ் போல ஆடுவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. நான் முழு ஃபார்மில் இருக்கும்போது கூட இவ்வாறு ஆடியிருக்க முடியாது.
விவியன் ரிச்சர்ட்தான் முதன்முதலில் அட்டாக்கிங் கிரிக்கெட்டை கற்றுக்கொடுத்தார். அதன்பிறகு சனத் ஜெயசூர்யாவும், கலுவிதரனாவும் (இலங்கை பேட்ஸ்மேன்கள்), முதல் 15 ஓவர்களில் எப்படி ஆட வேண்டும் என்று கற்றுக்கொடுத்தனர்.
டி20 பந்தையங்களை பவுலர்-பேட்ஸ்மேன்களுக்கு சரிசம வாய்ப்பளிக்கும் வகையில் மாற்ற சில மாற்றங்கள் தேவை. பவுலர் ஒரு ஓவரில் 2 பவுன்சர்கள் வீச அனுமதிக்க வேண்டும். ஏனெனில், முதல் பந்தில் பவுன்சர் வீசிவிட்டால், அந்த ஓவரில் இனிமேல் பவுன்சர் வராது என்ற நம்பிக்கையில் பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடிவிடுகிறார்கள். எனவே இரு பவுன்சர்களுக்கு அனுமதி தர வேண்டும்.
மேலும், பவுண்டரி எல்லைக்கோட்டின் தூரத்தை அதிகரித்து, ரன்கள் எளிதாக அடிக்கப்படுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான், பேட்ஸ்மேன்களுக்கான கேமாக மட்டுமின்றி, பவுலர்களுக்குமான ஆட்டமாக டி20 போட்டிகள் உருவாகும். இவ்வாறு ராகுல் டிராவிட் கூறினார்.