சென்னை: இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்சுக்குதான் சப்போர்ட் செய்வதாக பேஸ்புக் இணையதளம் தெரிவித்துள்ளது.
பேஸ்புக் இணையதளம் தனது தளத்தில் இயக்குபவர்களின் கலந்துரையாடல் மற்றும் அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில், ஐபிஎல் அணிகளில் எது அதிகம் பாப்புலரானது என்பதை கண்டுபிடித்துள்ளது.

ஏப்ரல் 1ம் தேதி முதல், இதுவரையில் நடந்த கலந்துரையாடல்கள் அடிப்படையில் ரசனை கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 26 மில்லியன் ரசிகர்கள் தங்களது பேஸ்புக்கில் கலந்துரையாடியது மற்றும் லைக்குகள் போட்டதன் அடிப்படையில் இந்த ஆய்வு நடந்தது.
இதில் ஆச்சரியப்படத்தக்க உண்மை என்னவென்றால், இந்தியாவின் தென்கோடி நகரமான சென்னையை தலைமையிடமாக கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான், நாட்டின் பல மாநிலங்களில் அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளது என்பதுதான்.
ஒவ்வொரு அணிக்குமே அந்தந்த அணிகளின் சொந்த மாநிலங்கள் முழுமையாக சப்போர்ட் செய்துள்ளன. ஆனால் பிற மாநிலங்களில் சென்னை கொடிதான் பறக்கிறது. அதிலும், டெல்லிவாசிகளில் பெரும்பாலானோர் தங்களது அணியைவிட, சென்னை அணியைத்தான் பெரிதும் ரசித்துள்ளனர் என்பது இதில் கவனிக்கத்தக்கது.
தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, ஒடிசா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், குஜராத், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் ஒரேடியாக சிஎஸ்கேவுக்குதான் ஆதரவு தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிராவின் சில மாவட்டங்களில் கூட மும்பை அணியைவிட சென்னையை அதிகம்பேர் சப்போர்ட் செய்கின்றனர். தெலங்கானா முழுக்க ஹைதராபாத் அணியை சப்போர்ட் செய்கிது. வடகிழக்கு மாநிலங்களில் ஒரு சில மாவட்டங்கள் மட்டும் கொல்கத்தாவை ஆதரிக்கின்றன.
சென்னை அணி, புள்ளி பட்டியலில் மட்டுமில்லை, ரசிகர்கள் பட்டியலிலும் முதலிடத்தில்தான் உள்ளது. சும்மாவா சொன்னாங்க.. சென்னை சூப்பர் கிங்சுக்கு பெரிய விசில் அடிங்கன்னு..