வம்பு சண்டை இழுப்பதற்காக வாயில் பிளாஸ்டர் போடவில்லை.. பொலார்ட் விளக்கம்
பெங்களூரு: தகராறு செய்யும் நோக்கத்தில் வாயில் பிளாஸ்டர் போட்டுக்கொள்ளவில்லை என்று மும்பை இந்தியன்ஸ் வீரர் பொலார்ட் விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வீரரும், தனது நாட்டவருமான கிறிஸ் கெயிலிடம் நேற்று மைதானத்தில் வம்பிழுத்தார் பொலார்ட். அம்பயர் கண்டித்ததை தொடர்ந்து, தனது வாயில் பிளாஸ்டர் போட்டு ஒட்டிக்கொண்டு மைதானத்திற்குள் வந்தார் பொலார்ட்.
நடுவரை அவமதிப்பது போல இருந்த பொலார்டின் செயலை ஊடகங்கள் விமர்சனம் செய்து வருகின்றன. இதையடுத்து டிவிட்டர் தளத்தில், பொலார்ட் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:

தகராறு செய்யும் நோக்கம் எனக்கில்லை. நான் தப்பு செய்தால் ஒப்புக்கொள்வேன். ஆனால், தப்பே செய்யாமல் என்னை பிடித்து உள்ளே இழுத்துவிடாதீர்கள். மீடியா செய்திகளை பார்க்க வேண்டாம்.
நான் எனது ஆட்டத்தை ரசிக்கிறேன். வெற்றிக்காக முழுவதுமாக உழைக்கிறேன். மும்பை தனது முதல் வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றி பயணம் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு பொலார்ட் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications