மும்பை: ஆஸ்திரேலியா - நியூசிலாந்தில் நடந்த உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் சரியாக ஆடாமல், சொதப்பி எடுத்த இங்கிலாந்து வீரர் இயான் மோர்கன், தற்போது ஐபிஎல் போட்டியில் கவனிக்கத்தக்க வகையில் ஆடி வருகிறார்.
நேற்று மும்பையில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பட்டையைக் கிளப்பியிருந்தார் மோர்கன். ஆட்ட நாயகனாகவும் அவர் தேர்வானார்.

உலகக் கோப்பைப் போட்டியில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கேவலமாக ஆடி முதல் சுற்றோடு மூட்டையைக் கட்டியது. இந்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டியில் சில இங்கிலாந்து வீரர்கள் ஆடி வருகிறார்கள். ஆனால் இங்கும் அவர்கள் சரியாக ஆடாத நிலையே இருந்து வந்தது.
இந்த நிலையில் இயான் மோர்கன் நேற்று திடீரென விஸ்வரூபம் எடுத்தார். நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானின் பந்து வீச்சை சிதறடித்த அவர் அரை சதம் போட்டு அணியை கரை சேர்த்தார்.
28 பந்துகளில் 63 ரன்களைக் குவித்த அவரது அதிரடி ஆட்டத்தால் ஹைதராபாத் அணி வலுப்பெற்றது. அவர் மற்றும் ஷிகர் தவன் ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்களில் 201 ரன்களைக் குவித்தது.
இந்த அதிரடி ஆட்டம் காரணமாக மோர்கனுக்கு ஆட்ட நாயகன் விருதும் கிடைத்தது. வலுவான ராஜஸ்தான் அணிக்கு மோர்கனின் திடீர் எழுச்சி பாதகமாக அமைந்து போனது.
எப்படியோ ஆஸ்திரேலியாவில் விட்டதை மும்பையில் பிடித்தாரே மோர்கன்!