ஹைதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று இரு லீக் ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில், ஹைதராபாத் அணியை மும்பை எளிதாக வீழ்த்தியது. பெங்களூர்-டெல்லி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டு, தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று 56வது லீக் போட்டி ஹைதராபாத் நகரில் நடந்தது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

எளிதான இலக்கை துரத்திய மும்பை அணி 13.5 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. 15 புள்ளிகளுடன் இருந்த நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி தொடரில் இருந்து வெளியேறியது.
ஐபிஎல் தொடரின் பெங்களூர் மற்றும் டெல்லிக்கு இடையேயான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
ஐபிஎல் தொடரின் 55வது லீக் ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதன்படி களமிறங்கிய டெல்லி அணி வீரர்களில் டி காக் மற்றும் கேப்டன் டுமினி அரைசதம் அடித்து ஸ்கோரை உயர்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் 5விக்கெட் இழப்பிற்கு 187ரன்கள் எடுத்தது.
188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. 1.1 ஓவர்கள் வீசப்பட்டிருந்த போது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. மேலும் போட்டியை தொடர முடியாததால் ஆட்டம் கைவிடப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால், பெங்களூர் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.