சென்னைக்கு எதிரான போட்டி: 'மும்பையை மீட்ட பாண்டியன்'!
சென்னை: ஐபிஎல் போட்டியில் நேற்று சென்னையிடமிருந்து மும்பைக்கு வெற்றியை பறித்துக் கொடுத்தது பாண்டியர் என்றால் நம்ப முடிகிறதா.
மும்பைக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது.
இரண்டாவதாக பேட்டிங்கை தொடங்கிய மும்பைக்கு ஆரம்பம் நன்கு அமைந்தபோதிலும், நடுவரிசை சொதப்பியதால், கடைசி கட்டத்தில் சென்னை கை ஓங்கியது. 18 பந்துகளில் 34 ரன்கள் தேவை என்ற நிலையில், மும்பை 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

நேகி ஓவரில் டமால்
அம்பத்தி ராயுடு மற்றும் ஹார்டிக் பாண்ட்யா ஆகியோர் புதிதாக அப்போதுதான் களமிறங்கியிருந்தனர். ஆனால் 19வது ஓவரை நேகி வீச வந்தபோது, பாண்டியன் விஸ்வரூபம் எடுப்பார் என்று யாரும் நினைக்கவில்லை. ஏனெனில், 3 ஓவர்கள் வீசியிருந்த நேகி 10 ரன்களை மட்டுமேதான் கொடுத்திருந்தார்.

ஒரே ஓவரில் 25 ரன்கள்
எனவே அவரை நம்பி 19வது ஓவரை கொடுத்தார் டோணி. அந்த ஓவரின் முதல் பந்திலேயே சூப்பர் சிக்சர் பறக்கவிட்டார் பாண்ட்யா. இரண்டாவது பந்தை ரிவர்ஸ் பெடல் செய்ய முயன்றார். ஆனால் ரன் கிடைக்கவில்லை. மூன்றாவது பந்தில் மீண்டும் சிக்சர் விளாசிய பாண்ட்யா, 4வது பந்தையும் சிக்சருக்கு விளாசிவிட்டு அடுத்த பந்தில் சிங்கிள் ஓடினார். கடைசி பந்தில் அம்பத்தி ராயுடுவும் சிக்சர் விளாசினர்.

கடைசி ஓவரில் வெற்றி
அந்த ஓவரில் மட்டும் 25 ரன்கள் கிடைத்தன. இதனால், கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்களே தேவைப்பட்டது. 2வது பந்திலேயே வெற்றி கிடைத்தது. பாண்ட்யா எட்டே பந்துகளில் 21 ரன்கள் குவித்து நாட்-அவுட்டாக நின்றார்.

மும்பையை மீட்ட பாண்டி
முன்னதாக, ஃபீல்டிங்கின்போதும் துடிப்பாக இருந்த பாண்ட்யா, 3 கேட்சுகளை லபக் செய்தார். இதனால், மும்பையை மீட்ட பாண்டியன் என்று புகழாரம் சூட்டுகின்றனர் தமிழக ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications