சென்னை: ஐபிஎல் தொடரில் லீக் ஆட்டங்களில் 2வது இடத்தை பிடிக்கும் அணிதான் கோப்பையை வெல்லுவது கடந்த நான்கு சீசன்களில் நடந்துள்ளது. இம்முறை அதே பார்முலா ஒர்க்அவுட் ஆனால், மும்பை கோப்பையை வெல்வது கன்பார்ம்.
நடப்பு 8வது சீசன் ஐபிஎல் தொடரில், லீக் ஆட்டங்கள் முடிந்து பிளேஆப் சுற்று போட்டிகள் தொடங்கியுள்ளன. லீக் ஆட்டத்தில் சென்னை முதலிடத்தையும், மும்பை இந்தியன்ஸ் 2வது இடத்தையும் பிடித்தன. எனவே அந்த அணிகள் முதல் பிளேஆப் சுற்றில் மோதின. அதில் மும்பை வென்று பைனலுக்குள் சென்றுவிட்டது.

இன்று நடைபெற உள்ள பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு நடுவேயான போட்டியில் வெற்றி பெறும் அணி சென்னையுடன் மோதும். அதில் எந்த அணி வெல்கிறதோ, அந்த அணி, மும்பையை வரும் ஞாயிற்றுக்கிழமை பைனலில் சந்திக்கும்.
இந்நிலையில், ஒரு புள்ளி விவரம் சென்னை ரசிகர்களை அச்சுறுத்துகிறது. அதாவது, கடந்த நான்கு சீசன்களிலும், லீக் சுற்றில் 2வது இடத்தை பிடித்த அணிதான், கோப்பையை வென்றுள்ளது. இம்முறை, மும்பை லீக் சுற்றில் 2வது இடத்தை பிடித்தது. முதலில் அடுத்தடுத்து தோற்ற மும்பை, முஷ்டியை மடக்கி, 2வது இடத்துக்கு முன்னேறிவிட்டது. இதனால், லீக் சுற்றில் முதலிடம் பிடித்த சென்னையை விட 2வது இடம் பிடித்த மும்பை மீதே ரசிகர்கள் கவனம் திரும்பியுள்ளது.
ஐபிஎல் தொடர்கள் நடந்த ஆண்டுகள், கோப்பையை வென்ற அணி ஆகியவையும், லீக் சுற்றில் அவை பிடித்த இடங்கள் அடைப்புக்குறிக்குள்ளும் தரப்பட்டுள்ளது. பாருங்கள்.
2008- ராஜஸ்தான் ராயல்ஸ் (1)
2009- டெக்கான் சார்ஜர்ஸ் (4)
2010- சென்னை சூப்பர் கிங்ஸ் (3)
2011- சென்னை சூப்பர் கிங்ஸ் (2)
2012- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2)
2013- மும்பை இந்தியன்ஸ் (2)
2014- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2)
2015- ?