புனே: 8 வது ஐபிஎல் தொடரில் நேற்றைய லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளும் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
புனேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. காயம் காரணமாக நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஷேன் வாட்சன் ஆடவில்லை. இதன் காரணமாக ஸ்மித் அணியை வழிநடத்தினார்.

பஞ்சாப் அணி கேப்டன் ஜார்ஜ் பெய்லி டாசில் வென்று தனது அணி முதலில் பவுலிங் செய்யும் என்று அறிவித்தார். எனவே, முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகட்பட்சமாக பல்க்னர் 46 ரன்களும் ஸ்மித் 33 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணி தரப்பில் அனிருத் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 163 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. இதனால் 26 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சேவாக், சவுத்தி வீசிய முதல் பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். அடுத்தடுத்த வீரர்களும், சொற்ப ரன்களில் வெளியேறினாலும், முரளி விஜய் நம்பிக்கை கொடுத்தபடி நின்றார். ஆனால் 37 ரன்கள் எடுத்திருந்தபோது, எதிர்பாராதவிதமாக விஜய் அவுட் ஆகவே, பஞ்சாப் ரன் சேஸிங் கனவு தகர்ந்தது.
சேவாக், மேக்ஸ்வெல், ஜான்சன், மில்லர் போன்ற ஜாம்பவான் வீரர்கள் இருந்தும் பஞ்சாப் அணி பரிதாபமாக தோற்றது ப்ரீத்தி ஜிந்தாவுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சிதான்.