மொகாலி: ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. மொகாலியில் நடைபெறும் இப்போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
பெங்களூர் அணி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 13 புள்ளிகள் பெற்று (ஒரு முடிவு இல்லை) பெற்று 5வது இடத்தில் உள்ளது. 'பிளேஆப்' சுற்று வாய்ப்பில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பெங்களூர் அணி கடுமையாக போராடும், அந்த அணி பலவீனமான பஞ்சாப்பை வீழ்த்தி 7வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. 'பிளேஆப்' வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்ட பஞ்சாப் அணி 2 ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 10 ஆட்டத்தில் தோற்று 4 புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது.
அந்த அணி தொடர்ச்சியாக 7 ஆட்டத்தில் தோற்றது. இன்றைய ஆட்டத்திலாவது அதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் அணி ஏற்கெனவே பஞ்சாப்பை பந்தாடியுள்ளதால் இந்த ஆட்டத்தை மிகுந்த நம்பிக்கை யோடு எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த அணியின் மும்மூர்த்திகளான கிறிஸ் கெயில், கேப்டன் விராட் கோலி, ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆகியோர் வீராவேசமாக ஆடி வருகின்றனர்.
அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் டிவில்லியர்ஸ் (436 ரன்கள்) 3வது இடத்திலும், விராட் கோலி (417) 5வது இடத்திலும் உள்ளனர். கெயில் 370 ரன்களுடன் 7-வது இடத்தில் உள்ளார். இந்த மூவரில் யார் நின்றாலும் பஞ்சாப்பின் பாடு சிக்கல்தான்.