சென்னை: ஐபிஎல் நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லியுடன் மோதிய ஆட்டத்தைதான் அதிகம் பேர் டிவியில் பார்த்துள்ளனராம். அதுமட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக கடந்த வருடத்தைவிட இந்த வருடம் 42 சதவீதம் பார்வையாளர்கள் அதிகரித்துள்ளதாக சொல்கிறது டிஆர்பி தகவல்கள்.
ஐபிஎல் நடப்பு சீசனின் முதல் 5 போட்டிகளுக்கான தொலைக்காட்சி டிஏஎம் ரிப்போர்ட்டுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதுவரை 105 மில்லியன் மக்கள் ஐபிஎல் பார்த்துள்ளனர். இது கடந்த சீசனை விட 9 சதவீதம் அதிகமாகும்.

ஆனால், ஐபிஎல் போட்டிகளுக்கு அதிக நேரம் செலவிட்டு பார்க்கும் அடிப்படையில், கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு 42 சதவீத முன்னேற்றம் கண்டுள்ளது. ஏனெனில் முதல் ஐந்து போட்டிகளுக்கான டிவிஆர் ரேட் விகிதம், கடந்த ஐபிஎல் ஆட்டத்தில் 3.1-ஆக இருந்த நிலையில், இவ்வாண்டு, அது 4.5-ஆக அதிகரித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் 1 வாரத்தில் ரசிகர்கள் சராசரியாக ஒவ்வொரு போட்டியையும், சுமார் 51 நிமிடங்கள் 44 விநாடிகள் கண்டுகளித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இது, 42 நிமிடம், 27 வினாடிகளாகத்தான் இருந்தது. இதுவரை அதிகம் பார்க்கப்பட்ட போட்டியாக சாதனை படைத்துள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் இடையேயான போட்டி. அந்த போட்டிக்கான தொலைக்காட்சி டிவிஆர் ரேட்டிங் 4.7-ஆக இருந்தது. இதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் ராயல்ஸ்-பஞ்சாப் போட்டிக்கான ரேட்டிங் 4.5-ஆக இருந்தது.
கிரிக்கெட் மீதான மோகம், மக்களிடம் கூடியுள்ளது என்பதை இந்த ரிப்போர்ட் எடுத்துக் காட்டுகிறது.