பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக 200 ரன்களைத் தொட்டதால் ரசிகர்கள் உற்சாகமடைந்த நிலையில் மழை வந்து பெங்களூரு அணியின் வெற்றி வாய்ப்பைக் கெடுத்து விட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இளம் வீரர் சர்பிராஸ் கான் மற்றும் ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோர் அதிரடியாக ஆடி அரை சதம் குவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில் மழை ரூபத்தில் ராஜஸ்தானுக்கு விமோச்சனம் பிறந்து அந்த அணியை காப்பாற்றி விட்டது.

பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களைக் குவித்தது. ஆனால் பெங்களூரு இன்னிங்ஸ் முடிந்ததுமே மழை வந்து விட்டது. இதனால் ராஜஸ்தான் அணி தனது சேஸிங்கைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.
நீண்ட நேரம் காத்திருந்து பார்த்தும் மழை நிற்கவில்லை. இதனால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கபப்ட்டது. ராஜஸ்தான் அணி தொடர்ந்து பேட் செய்திருந்தால் ஒரு வேளை அந்த அணியை முடக்கி பெங்களூரு வென்றிருக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், அந்த வாய்ப்பு பெங்களூரு அணிக்குக் கிடைக்காமல் போய் விட்டது.
போட்டி கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது. இதனால் 12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது ராஜஸ்தான். அதேசமயம், பெங்களூரு அணி தற்போது 3வது இடத்தில் வந்து நிற்கிறது.