கண்ணு சரியா தெரியலை.. அதான் சரியா ஆட முடியலை... இப்ப ஓகே... ஷேவாக் திடுக் தகவல்!
டெல்லி: எனக்கு கண்ணில் பிரச்சினை ஏற்பட்டு விட்டது. தூரப் பார்வைப் பிரச்சினையால் அவதிப்பட்டேன். இதனால்தான் எனது பேட்டிங் திறமை திடீரென சரிந்து போனது. இப்போது கண்ணாடி போட்ட பிறகு பரவாயில்லை. மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்று ஆட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் வீரேந்திர ஷேவாக்.
ஷேவாக் ஒரு காலத்தில் அதிரடி வீரராக இந்திய அணியில் வலம் வந்தவர். அவர் அடிக்க ஆரம்பித்தால் எதிரில் பந்து வீசுவோர் உச்சா போகும் நிலை இருந்தது. அப்படி ஒரு அட்டாக் வீரராக இருந்தவர் ஷேவாக்.
ஆனால் திடீரென ஷேவாக்கின் சகாப்தம் இந்திய அணியில் முடிவுக்கு வந்தது. அவருக்கு அணியில் இடம் தரப்படவில்லை. கடந்த 2 வருடத்திற்கும் மேலாக அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. இது பலருக்கும் ஏன் என்று புரியவில்லை. ஷேவா்கும் இதுதொடர்பாக பேசியதில்லை. இப்போது முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் ஷேவாக்.

16,000 ரன்கள் குவிப்பு
சர்வதேச போட்டிகளில் 16,000 ரன்களைக் குவித்துள்ளார் ஷேவாக். 36 வயதான அவர் கடைசியாக 2013ம் ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்று ஆடியிருந்தார். அதன் பிறகு அணியில் இடம் பெறவில்லை.

104 டெஸ்ட்
இதுவரை 104 டெஸ்ட் போட்டிகள், 251 ஒரு நாள் போட்டிகளில் ஷேவாக் ஆடியுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் ஜெராக்ஸ் காப்பி என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்பட்டவரும் கூட.

2011ல் வந்த கண் பிரச்சினை
தனது பிரச்சினை குறித்து ஷேவாக் கூறுகையில், 2011ம் ஆண்டு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடரின்போது எனக்கு கண்ணில் பிரச்சினை ஏற்பட்டது. எனக்குத் தலைவலியும் வந்தது. என்னால் சரியாக ஆட முடியவில்லை. அங்குள்ள டாக்டர்களிடம் கேட்டபோது எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறி விட்டனர்.

தூரப் பார்வை பிரச்சினை
இந்தியா வந்ததும் எனது டாக்டரிடம் ஆலோசனை நடத்தியபோது தூரப் பார்வை பிரச்சினை இருப்பதை அவர் கண்டுபிடித்தார். இதுவே கண் வலிக்கும், தலைவலிக்கும் காரணம் என்று அவர் கூறினார்.

கண்ணாடி போட்டேன்
இதையடுத்து நான் கண்ணாடி போட ஆரம்பித்தேன். ஆனால் கண்ணாடி போட்டுக் கொண்டு விளையாடுவது எளிதாக இருக்கவில்லை. அதற்குப் பழக்கப்படவே எனக்கு ஒரு வருடமாகி விட்டது. என்னால் பந்தை சரியாக கணித்து அடிப்பதில் சிரமம் இருந்தது.

காண்டாக்ட் லென்ஸ் சரிப்படவில்லை
கண்ணாடிக்குப் பதில் காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்த முயற்சித்தேன். ஆனால் எனது எனக்கு சரிப்பட்டு வரவில்லை. இதனால் கண்ணாடியுடன் நின்று விட்டேன்.

மீண்டும் ஆட ஆசை
இந்திய அணியில் இடம்பெற்று ஆட ஒவ்வொரு இந்தியருக்கும் ஆசை இருக்கும். எனக்கும் இன்னும் ஆசை உள்ளது. என்னால் முடிந்தவரை சிறப்பாக ஆட முயற்சிப்பேன். இந்திய அணியில் இடம் பெற்று கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ஷேவாக்.

ஐபிஎல் நாயகன்
தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் ஆடி வருகிறார் ஷேவாக். முன்பு டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இருந்தார். தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications