கேகேஆர் அணியின் 'சீக்ரெட் ஆப் சக்சஸ்' என்ன?: சொல்கிறார் ஷாருக்கான்
டெல்லி: ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் தனது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கான ரகசியத்தை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வெளியிட்டுள்ளார்.
ஐபிஎல் 8வது சீசன் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. கொல்கத்தாவில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றியுடன் இந்த சீசனை துவங்கியது.
இதையடுத்து கொல்கத்தா அணி விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம் மோதி தோல்வி அடைந்தது.

கோப்பை
ஐபிஎல் 6 மற்றும் 7வது சீசன்களில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தான் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து அந்த அணிக்கு மேற்கு வங்க அரசு பாராட்டு விழா நடித்தி பதக்கங்கள் வழங்கி கௌரவித்தது தனிக் கதை.

ஷாருக்கான்
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் வெற்றியின் ரகசியத்தை ஷாருக்கான் வெளியிட்டுள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறுகையில், ஐபிஎல் போட்டிகளை பயன்படுத்தி தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற எங்கள் வீரர்களின் தாகமும், உத்வேகமும் தான் எங்கள் அணியின் வெற்றிக் காரணம் என்கிறார்.

திறமை
எங்கள் அணியில் சர்வதேச அளவுக்கு திறமையான வீரர்கள் பலர் உள்ளனர். அவர்களில் சிலரைத் தவிர வேறு யாரும் தற்போது சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை என்பது அதிர்ஷ்டவசமானது என்று கூட கூறலாம் என்று ஷாருக் தெரிவித்துள்ளார்.

பயிற்சி
சர்வதேச போட்டிகளில் விளையாடாததால் இந்த ஐபிஎல்லை பயன்படுத்தி தங்கள் திறமையை வெளிப்படுத்த எங்கள் வீரர்கள் விரும்புகிறார்கள். திறமை உள்ளது, பயிற்சி உள்ளது, கடின உழைப்பு உள்ளது. ஐபிஎல் போட்டிகளை பயன்படுத்தி சர்வதேச போட்டிகளிலும் தங்களால் விளையாட முடியும் என்பதை அவர்கள் காண்பிக்கிறார்கள் என்று கூறியுள்ளார் ஷாருக்கான்.

ஆப்ராம்
கொல்கத்தாவில் நடந்த போட்டியில் ஷாருக்கான் தனது மூத்த மகன் ஆர்யன், மகள் சுஹானா, இளைய மகன் ஆப்ராமுடன் வந்திருந்து கேகேஆர் அணியை ஊக்குவித்தார். ஆனால் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது ஷாருக்கானை ஸ்டேடியத்தில் காணவில்லை.


Click it and Unblock the Notifications