பெங்களூரு: வீண் வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடாது என நடுவர் எச்சரித்ததைத் தொடர்ந்து, வாயில் செல்லோடேப் ஒட்டிக் கொண்டு வந்த மும்பை இந்தியன்ஸ் வீரர் கீரன் போலார்டின் நடவடிக்கையை மைதானத்தில் கூடி இருந்த ரசிகர்கள் கைதட்டி ரசித்தனர்.
ஐபிஎல் தொடரின் 16வது லீக் ஆட்டம் நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. அனல் பறக்க நடந்த இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ் அணியும் மோதின.
ஆட்டத்தின் 3வது ஓவரின் போது பேட்ஸ்மேன் கிறிஸ் கெயிலுக்கு அருகில் கடமையே கண்ணாக பீல்டிங் செய்து கொண்டிருந்தார் போலார்ட். சக மேற்கு இந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த கெய்லை சீண்டுவது போல நடந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்து போலார்டை அழைத்த நடுவர், 'வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது' என எச்சரிக்கை விடுத்தார்.

'நான் ஒண்ணுமே செய்யலையே' என தெரிவித்த போலார்ட்டிடன், 'இது வெறும் எச்சரிக்கை தான்' என்றார் நடுவர்.
இதனால் கோபமான போலார்ட், ஓவர் இடைவேளையின் போது ஓடிப்போய் ஒரு செல்லோ டேப்பை வாயில் ஒட்டிக்கொண்டு சமத்துப் பிள்ளையாக மைதானத்துக்குள் வந்தார். பவுண்டரி லைனில் இருந்த ரிக்கி பாண்டிங் உட்பட மும்பை அணி வீரர்கள் அனைவரும் போலார்டின் இந்த நடவடிக்கையை பார்த்து சிரித்தனர்.
அது மட்டுமல்லாமல் சக வீரர்களுடன் பேசுவதாக இருந்தால் டேப்பை லேசாக நீக்கி பேசி விட்டு மறுபடியும் ஒட்டிக் கொண்டார் போலார்ட்.
இது மைதானத்தில் இருந்த பிரம்மாண்டமான திரையிலும் காட்டப்பட்டது. ரசிகர்களும் போலார்ட்டின் செய்கையைக் கண்டு ரசித்துச் சிரித்தனர். இதனால் மைதானமே சிரிப்பில் ஆழ்ந்தது. இறுதியில், அதே திரையில் 'சைலன்ஸ் ப்ளீஸ்' என்று காட்டிய பிறகுதான் ரசிகர்களின் சிரிப்புச்சத்தம் கொஞ்சம் அடங்கியது.
ஒரு முரட்டு சிங்கத்துக்குள் இப்படி ஒரு சிரிப்பு ரோஜாவா...!!